20 ஆயிரம் கிளர்க் பணிக்கான நேர்முகத் தேர்வை ஸ்டேட் பாங்க் கடந்த சில நாட்களாக நடத்தி வருகிறது. சுமார் 10 முதல் 15 நிமிடம் வரை ஒவ்வொருவரும் நேர்முகத் தேர்வில் பரிசோதிக்கப்படுகிறார்கள். பட்டப்படிப்பில் நீங்கள் படித்துள்ள படிப்பிலிருந்து கேள்விகள் ஒரு பகுதியாகக் கேட்கப்படுகின்றன. பின்பு நீங்கள் நுழைய விரும்பும் ஸ்டேட் பாங்க் தொடர்பான கேள்விகளும், இந்திய வங்கித் துறை தொடர்பான அடிப்படைக் கேள்விகளும் கேட்கப்படுகின்றன. செய்தித்தாள்களிலிருந்து நடப்புச் செய்திகளும் பொது அறிவுக் கேள்விகளும் இடம் பெறுகின்றன.
எதற்காக இந்த வேலை உங்களுக்குத் தர வேண்டும், எப்படி இதற்கு நீங்கள் பொருத்தமானவர், இந்த வேலை கிடைக்காவிட்டால் என்ன செய்வீர்கள், வங்கி வேலைக்கு அடிப்படைத் தேவை என்ன, எந்த இடத்தில் வேலை தரப்பட்டாலும் செல்வீர்களா, உக்ஙளது பலம் என்ன, உங்களது ரோல் மாடல் யார் போன்ற பொதுவான தனிநபர் சார்ந்த கேள்விகளும் கேட்கப்படுகின்றன.
பொதுவாக நேர்முகத் தேர்வுகளில் நாம் பேசுவதிலிருந்து தான் அடுத்த கேள்வியே கேட்கப்படுகிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள். எனவே தேவையில்லாமல் வார்த்தைகளைப் பேசி வம்பை இழுத்துக் கொள்ளாதீர்கள்.
நேர்முகத் தேர்வுக்கு செல்லும் வரை நடப்புச் செய்திகளை அவற்றின் பின்னணியோடு அறிந்து தயாராவது அவசியம். எந்த செய்தித்தாள் படிக்கிறீர்களோ அந்த செய்தித்தாள் பற்றிய விபரங்களையும் அறிந்து கொள்ளவும்.