இரவில் சுமார் 9 மணி நேரம் தூங்காத குழந்தைகள் பள்ளியில் பாடங்களை கவனிக்க சிரமப்படுவார்கள் என்கிறது ஒரு ஆய்வு.
இரவில் நன்றாக நிம்மதியான உறக்கத்தைப் பெறும் பிள்ளைகள் காலையில் உற்சாகமாக பள்ளிக்குக் கிளம்புகின்றன. அதேப்போல பள்ளியிலும் பாடங்களை உடனுக்குடன் புரிந்து கொள்கின்றன.
அதே சமயம், சரியான தூக்கம் இல்லாத குழந்தைகள் பள்ளியில் சக தோழர்களுடன் சரியாக பழக முடியாமலும், ஆசிரியர் நடத்தும் சிறிய கணக்குகளைக் கூட புரிந்து கொள்ள முடியாமலும் அவதிப்படுவார்கள்.
ஒவ்வொரு நாளும் அதிக பாடங்களைப் படித்துவிட்டு இரவில் தாமதமாகத் தூங்கி அதிகாலையில் சீக்கிரம் எழுந்து பள்ளிக்குச் செல்லும் நிலை தற்போது உள்ளது. ஆனால் அது பிள்ளைகளின் அறிவு வளர்ச்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது உண்மை.
நல்ல உறக்கமே மாணவர்களின் உடல் மற்றும் மன வளர்ச்சிக்கு இன்றியமையாததாகிறது. அது சீராக கிடைக்கும்பட்சத்தில் மாணவர்கள் படிப்பில் மிளிர்வார்கள்.
தற்போதெல்லாம் மாணவர்கள் பல மணி நேரங்களை டிவி பார்ப்பதிலும், கணினி விளையாட்டுகளிலும் செலவிட்டு உறக்கத்தை கெடுத்துக் கொள்கின்றனர். இதனால் தூக்கம் கெடுவது மட்டுமல்லாமல் அவர்களது அறிவு வளர்ச்சியும் குறைகிறது என்பது கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஒரு மாணவர் படிப்பில் கவனக்குறைவுடன் செயல்படுகிறார் என்றால் உடனடியாக டியூஷன் அனுப்புவது, சிறப்பு பயிற்சிக்கு ஏற்பாடு செய்வது போன்றவற்றோடு, பெற்றோர் மாணவரின் தூக்க நேரத்தை அதிகப்படுத்தி, டிவி பார்ப்பதையும், கணினி விளையாட்டை குறைப்பதற்கும் முயற்சி மேற்கொள்வதுதான் நல்ல மாற்றத்தை கொடுக்கும்.