பி.சி.ஏ., படிப்பை தொலைதூரக்கல்வி முறையில் படித்தால் பலனுண்டா?பிப்ரவரி 07,2009,00:00 IST
இது போன்ற கேள்விகள் ஏராளமாகக் கேட்கப்படுவதைக் காண்கிறோம். தொலை தூரக் கல்வி என்பது போதிய நேரடி வகுப்புகள் இல்லாமல் தொடர்பு வகுப்புகள் மூலமாக மட்டுமே நடத்தப்படுகின்றன. பல பல்கலைக்கழகங்கள் தொலை தூரக் கல்வி முறையை தங்களுடைய நிதி மேம்பாட்டிற்காக மட்டுமே பயன்படுத்திக் கொள்கின்றன. பி.சி.ஏ., படிப்பானது போதிய கம்ப்யூட்டர் பயிற்சியை உட்கொண்டதாக இருக்க வேண்டும். ஆனால் இன்று பல நேரடி கல்லூரிகளே போதிய வகுப்புகளை நடத்துவதில்லை. மாலை நேரக் கல்லூரி என்ற பெயரில் பகுதி நேர படிப்புகளை காலை ஒரு பிரிவாகவும் மாலை ஒரு பிரிவாகவும் நடத்துவதைக் காண்கிறோம்.
இந்த கல்லூரிகளில் தங்களது பிள்ளைகளை சேர்த்து விட்டுள்ள பெற்றோர் தங்களது பிள்ளைகள் பெறும் கல்வித் தரம் குறித்த கடுமையான குழப்பத்தில் இருப்பதை நாம் சாதாரணமாகக் காண்கிறோம். எனவே இன்றைய சூழலில் பி.சி.ஏ., போன்ற படிப்பானது ஏற்கனவே ஒரு வேலையில் இருப்பவருக்கு கூடுதல் தகுதி தருவதற்காக மட்டுமே பயன்படுகின்றன. இந்தத் தகுதியைக் கொண்டு அந்தப் படிப்புக்கேற்ற வேலையைப் பெற முடியுமா என்றால் அது ஒரு பெரிய கேள்விக்குறிதான். எனவே பி.சி.ஏ., படிப்பை நீங்கள் தொலைதூரக் கல்வி முறையில் படித்தாலும் போதிய கம்ப்யூட்டர் பயிற்சியைப் பெற முயற்சிப்பது மட்டுமே ஓரளவு பயன் தரக் கூடியதாக இருக்கும்.