ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார் அடுத்த, மாம்பாக்கத்தில், ரியான் என்ற பெயரில் சி.பி.எஸ்.சி., பள்ளி இயங்கி வருகிறது.
இப்பள்ளியில் 1,000த்துக்கும் அதிகமான மாணவ - மாணவியர் பயின்று வருகின்றனர்.
பள்ளிக்கு நேற்று மதியம் இ - மெயில் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து, அதிர்ச்சியடைந்த பள்ளி நிர்வாகம், ஸ்ரீபெரும்புதுார் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மாணவர்களை பள்ளி அறைகளில் இருந்து வெளியேற்றி, விளையாட்டு மைதானத்திற்கு பாதுகாப்பாக அனுப்பினர்.
பின்னர் அவர்கள் பள்ளி பேருந்து வாயிலாக வீட்டிற்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும், வெடிகுண்டு நிபுணர்கள் வந்து, பள்ளி வளாகம் முழுதும் சோதனை நடத்தினர். நீண்ட நேர சோதனைக்கு பின் வெடிகுண்டு மிரட்டல் வதந்தி என, தெரியவந்தது.