ராயப்பேட்டை: திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை மணப்பாக்கம் பகுதியில், கப்பல் மற்றும் அதைச் சார்ந்த படிப்புகளை கற்பிக்கும் சாம்ஸ் எனும் கல்லுாரி செயல்பட்டு வருகிறது.
இந்த கல்லுாரியின் தலைமை நிர்வாக அலுவலகம், சென்னை சாந்தோம் பகுதியில் உள்ளது.
சில ஆண்டுகளாக இந்த நிர்வாக அலுவலகத்தில் கணக்காளராக காமினி, 38, என்பவரும், விளம்பர அதிகாரியாக வெங்கடேசன்,42, என்பவரும் பணியாற்றி வந்தனர். கடந்தாண்டு, இக்கல்லுாரியின் மாணவர்கள் சேர்க்கை மற்றும் அவர்கள் அளித்த கல்விக் கட்டணம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
இதில், மாணவர்கள் அளித்த கல்விக் கட்டணத்தில் இருந்து ஒரு பகுதி, கணக்கில் காட்டப்படவில்லை என தெரிந்தது. விளம்பர அதிகாரி வெங்கடேஷ் சில ஆண்டுகளாக, 35 லட்சம் ரூபாய் அளவிற்கு மோசடி செய்ததும், அதை கணக்கில் காட்டாமல் காமினி உடந்தையாக இருந்ததும் தெரிந்தது.
இதையடுத்து, கல்லுாரி நிர்வாகம் சார்பில் நேற்று முன்தினம், ராயப்பேட்டை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவான அவர்களை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.