சென்னை: லோக்சபா தேர்தலை முன்னிட்டு, 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகளை ஏப்ரல் 12ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. ஓட்டுப்பதிவு பள்ளிகளில் தான் நடைபெறும். ஆசிரியர்கள் வாக்குச்சாவடியில் பணியில் அமர்த்தப்படுவார்கள்.
இந்நிலையில், 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகளை ஏப்ரல் 12ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், தமிழகத்திலுள்ள அனைத்து அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கான 2023-2024ம் கல்வி ஆண்டிற்கான இறுதித் தேர்வுகள் ஏப்ரல் 2ம் தேதி துவங்கி ஏப்ரல் 12ம் தேதி வரை நடைபெறும்.
ஏப்ரல் 13ம் தேதி முதல் மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்படுகிறது. கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும் நாள் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.