கோவில்பாளையம்: பெத்தநாயக்கன்பாளையம், துவக்கப்பள்ளியில், ஸ்மார்ட் வகுப்பறை அசத்துகிறது.
கோவில்பாளையம் அருகே கள்ளிப்பாளையம் ஊராட்சியில், பெத்தநாயக்கன்பாளையத்தில் 1964 முதல் 60 ஆண்டுகளாக துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் வகுப்பறையின் உள்புறம், வெளிப்புறம், சுற்றுச்சுவர் என அசத்தும் ஓவியங்கள் மாணவர்களை மட்டுமல்லாமல் பெற்றோரையும் கவர்கிறது.
பள்ளியில் புரஜெக்டர், கம்ப்யூட்டர், பவர் பாயிண்ட் வசதியுடன் ஸ்மார்ட் வகுப்பறை உள்ளது. புதிய கல்வி முறை, கியூ.ஆர். கோடு மற்றும் கல்வி சார்ந்த வீடியோக்கள், அதிகளவில் உள்ளன. தனியார் பள்ளிக்கு நிகராக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, சுகாதாரமான கழிப்பறை, காலை சிற்றுண்டி திட்டம், மதிய உணவு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இல்லம் தேடி கல்வித் திட்டத்திலும் இங்கு வகுப்புகள் நடக்கின்றன. இத்துடன் ஆங்கில பேச்சுக்கு, யோகா, நடனம், இசை, ஓவியத்துக்கும் தனி வகுப்புகள் நடத்தப்படுகிறது. அகில இந்திய வானொலியில் மாணவர்களுக்கான நிகழ்வில் இப்பள்ளி மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். கோவை கலெக்டர், பள்ளி ஆசிரியர்களுக்கும், வானொலி நிகழ்ச்சி மாணவர்களுக்கும் வாழ்த்து தெரிவித்தார்.
இப்பள்ளி மாணவர்கள் தொடர்ந்து களப்பயணம் அழைத்துச் செல்லப்படுகின்றனர். ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை தமிழ் வழி கல்விக்கான சேர்க்கை நடைபெறுகிறது என பள்ளி தலைமை ஆசிரியை புஷ்பலதா தெரிவித்தார்.