குன்றத்துார்: குன்றத்துார் அருகே திருமுடிவாக்கத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இங்கு பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் 30 பேர், பூந்தண்டலத்தில் உள்ள தனியார் பள்ளி மையத்தில் தேர்வு எழுதுகின்றனர்.
தேர்வு நாட்களில் திருமுடிவாக்கம் அரசு பள்ளி மாணவர்களை தனியார் பள்ளி பேருந்தில் அழைத்து செல்வது வழக்கம். நேற்று தேர்வு எழுதிய மாணவர்களுடன், பூந்தண்டலம் - பழந்தண்டலம் சாலையில், தனியார் பள்ளி பேருந்து சென்றது.
அப்போது ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் இருந்த மின்கம்பம் மீது பேருந்து மோதி சாலையில் கவிழ்ந்தது. இதில், பேருந்தின் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. அரசு பள்ளி மாணவர்கள் 11 பேர் காயமடைந்தனர். உடனடியாக மின்சார இணைப்பு துண்டிப்பானதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
அவ்வழியாக சென்றவர்கள், மாணவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று மாணவர்கள் வீடு திரும்பினர். குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.