கோவை: பாரதியார் பல்கலைக்கு தொலைதுார மையத்தில் மாணவர்கள் சேர்க்கை நடத்த அங்கீகாரம் கிடைத்தும், சேர்க்கை செயல்பாடுகள் இதுவரை துவக்கப்படாமல் உள்ளதாக, அதிருப்தி எழுந்துள்ளது.
பாரதியார் பல்கலையின் தொலைதுார கல்வி மையத்தில் சுமார், 90 ஆயிரம் மாணவர்கள் வரை படித்து வந்தனர். இதில் பல்வேறு குளறுபடிகள் நடந்ததாலும், நாக்., தரப்புள்ளிகள் குறைந்து இருந்ததாலும், தொலைதுார கல்வி மையத்தின் அங்கீகாரத்தை யு.ஜி.சி., ரத்து செய்தது. இதன் காரணமாக, 2018ம் ஆண்டுக்குப் பின், சேர்க்கை செயல்பாடுகள் நிறுத்தப்பட்டன.
நாக்., தர ஆய்வுகளில் 3.11 புள்ளிகளுடன் இருந்த பல்கலை 2023ம் ஆண்டு, நடைபெற்ற ஆய்வுகளில், 3.64 புள்ளிகளாக அதிகரித்தது. தரப்புள்ளிகள் அதிகரித்ததை தொடர்ந்து, 2023 மார்ச் மாதம் அங்கீகாரம் வேண்டி விண்ணப்பிக்கப்பட்டது. 2024 பிப்., மாதம், தொலைதுார பிரிவில், 15 முதுநிலை பாடப்பிரிவுகள் நடத்த அங்கீகாரம் கிடைத்தது. அங்கீகாரம் கிடைத்தும், மாணவர் சேர்க்கை செயல்பாடுகள் பல்கலை தரப்பில் இதுவரை துவங்கவில்லை.
பல்கலை மானியக்குழு சேர்க்கை விதிமுறைகளின் படி, ஜன., மாத பிரிவுக்கான சேர்க்கை மார்ச் 31க்குள் முடிக்க வேண்டும். ஆனால், பாரதியார் பல்கலையின் கீழ் இதுவரை துவக்கப்படாமல் உள்ளதாக, பேராசிரியர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, தொலைதுார கல்வி மைய இயக்குனர் ( பொறுப்பு) முத்துகிருஷ்ணன் கூறுகையில், கடந்த, பிப்., மாதம் சேர்க்கை அங்கீகாரம் கிடைத்தது. போர்ட்டல் துவங்கப்பட்டு, அதில் பதிவு செயல்பாடுகள் நடந்து வருகின்றன. இதுகுறித்த கோப்புகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. ஓரிரு நாட்களில், சேர்க்கை செயல்பாடுகள் துவங்கப்படும் என்றார்.