கோவை: தமிழ்நாடு எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலைக்கு, கோவை நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
கோவை, வடமதுரையை சேர்ந்த ராஜசேகர் என்பவர் மகன் கவுதம், செல்வபுரம், தெலுங்குபாளையம் பிரிவிலுள்ள தனியார் பார்மசி கல்லுாரியில் படித்து வந்தார். கவுதமை செமஸ்டர் தேர்வு எழுத அனுமதி மறுத்ததால், கல்லுாரி மற்றும் தமிழ்நாடு எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை மீது, கோவை நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில், புகார் மனு தாக்கல் செய்யப்பட்டது.
விசாரணைக்கு ஆஜராகுமாறு, மருத்துவ பல்கலைக்கு இரண்டு முறை நோட்டீஸ் அனுப்பியும் ஆஜராகவில்லை. புகார் மனு நேற்று விசாரணைக்கு வந்த போது, பல்கலை நிர்வாகம் தரப்பில் பதில் அளிக்கப்படவில்லை.
இதனால், மருத்துவ பல்கலைக்கு, 20,000 ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி நாராயணன் உத்தரவிட்டார். அபராத தொகையை, இரண்டு வாரத்திற்குள் சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி நிவாரண நிதிக்கு செலுத்த உத்தரவிடப்பட்டது.