சேலம்: தமிழகத்தில் கடந்த மார்ச், 1ல் பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடங்கியது. சேலம் மாவட்டத்தில், 151 மையங்களில், 35,439 மாணவ, மாணவியர் எழுதினர்.
இதன் நிறைவாக நேற்று உயிரியல், தாவரவியல், புள்ளியியல், வணிக கணிதம் உள்ளிட்ட பாடங்களுக்கு தேர்வு நடந்தது. மதியம் தேர்வு முடிந்து வெளியே வந்த மாணவர்கள், தேர்வு முடித்த மகிழ்ச்சியை நண்பர்களுடன் பரிமாறிக்கொண்டனர்.
கலர்பொடிகளை பூசி, பேனா இங்க் மை தெளித்து விளையாடினர். ஆசிரியர்களுக்கு இனிப்பு வாங்கி கொடுத்து, வாழ்த்து பெற்றனர். தனியார் பள்ளிகளில், பேர்வெல் பார்ட்டி கொண்டாடினர். தேர்வு பதற்றத்தில் இருந்து விடுபட்டு, விடுமுறையை கொண்டாடும் மகிழ்ச்சியில் மாணவ, மாணவியர் வீடு திரும்பினர். தாரமங்கலத்தில் சில மாணவர்கள், பட்டாசு வெடித்து மகிழ்ந்தனர்.