கோர் இன்ஜினியரிங்
புதிய தொழில்நுட்ப படிப்புகளுக்கு மட்டுமின்றி, கோர் இன்ஜினியரிங் படிப்புகளுக்கான வாய்ப்புகளும் பிரகாசமாக உள்ளன. நம் நாட்டில் உள்ள தொழில் நிறுவனங்கள் உற்பத்தியில் மட்டுமின்றி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிலும் அதிக கவனம் செலுத்துகின்றன. கல்வி நிறுவனங்களில் உள்ள உள்கட்டமைப்பு வசதிகளைப் பொறுத்தவரை, ஐ.டி., இன்ஜினியர்களை உருவாக்குவதற்கு அதிக முதலீடுகள் அவசியமில்லை. ஆனால், கோர் இன்ஜினியரிங் படிப்புகளுக்கான உள்கட்டமைப்பு வசதிகளை தொடர்ந்து மேம்படுத்தப்பட வேண்டி உள்ளதால் அதிக முதலீடுகள் அவசியமாகின்றன.
எந்த ஒரு சமூக பிரச்னைகளுக்கும் தீர்வு காண இன்றைய மாணவர்கள் முயற்சி செய்ய வேண்டும்.
அப்போது, புராஜெக்ட் சார்ந்த செயல்முறை கல்வி அறிவு,பல்துறை அறிவு, ஆராய்ச்சி திறன் ஆகியவை மேம்படும். அவர்கள் புத்தாக்க சிந்தனையாளர்களாகவும், அனுபவமிக்கவர்களாகவும் எதிர்காலத்தில் பிரகாசிப்பார்கள். இது அனைத்து துறை மாணவர்களுக்கும் பொருந்தும்.
அண்ணா பல்கலைக்கழகம் தேவையான மாற்றங்களை புகுத்தி உள்ளதால், தொழில்நிறுவனங்கள் எதிர்பார்க்கும் திறன்கள் மற்றும் ஒவ்வொரு துறையிலும் வேலைவாய்ப்பு சார்ந்த திறன்களை மாணவர்களால் பாடத்திட்டம் சார்ந்தே வளர்த்துக்கொள்ள முடியும். ஆகவே, திறன்கள் குறித்துஇன்ஜினியரிங் படிக்க விரும்பும் மாணவர்கள் கவலைப்பட வேண்டியதில்லை. ஒவ்வொரு செமஸ்டரிலும் என்னென்ன திறன் வளர்ப்பு சார்ந்த இதர படிப்புகளை படிக்கவேண்டும், எவ்வாறு புராஜெக்ட் செய்ய வேண்டும் ஆகியவை குறித்து கல்வி நிறுவனங்கள் இன்றைய மாணவர்களுக்கு வழிகாட்டுகின்றன.
அவற்றுடன், நான்கு ஆண்டுகால படிப்பின்போதே பிரச்னைகளுக்கு தீர்வு காணும் திறனையும் மாணவ, மாணவிகள் வளர்த்துக்கொள்ள வேண்டும். வெளிநாட்டு மொழிகளையும் கற்றுக்கொள்ள வேண்டும்.
மாணவிகளும் சாதிக்கலாம்
நம் நாட்டில் உயர்கல்வி சிறப்பான வளர்ச்சி அடைந்துள்ள போதிலும், இன்னும் இன்ஜினியரிங் துறைகளை தேர்வு செய்யும் மாணவிகளின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பிலியே இந்தநிலை தொடர்கையில், மெக்கானிக்கல், சிவில் ஆகிய இன்ஜினியரிங் படிப்புகளில் அவர்களின் சேர்க்கை மிக அரியதாகவே உள்ளது. ஆனால், அவ்வாறான துறைகளில் படித்த மாணவிகள் உயர்ந்த நிலையை அடைந்துள்ளனர்.
சீனா, ஜப்பான், கொரியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள உற்பத்தி நிறுவனங்கள் பெரும்பாலும் ஆட்டோமேஷன் செய்யப்பட்டுவிட்டன. நம் நாட்டிலும் அத்தகைய சூழல் உருவாகி வருகிறது. ஆகவே, இயந்திரங்களை பாதுகாப்பற்ற நிலையில் கையாள வேண்டிய நிலை இல்லை. அனைத்து துறைகளிலும், ரோபோக்கள், நவீன இயந்திரங்கள், சென்சார்கள், இமேஜிங் ஆகியவை பயன்படுத்தப்படும் நிலையில், பெண்களுக்கும் முழு பாதுகாப்பு உண்டு. தனியார் நிறுவனங்களில் மட்டுமின்றி, அரசு நிறுவனங்களும் அதிகளவில் வாய்ப்புகளும், வளர்ச்சியும் உண்டு.
கம்ப்யூட்டர் சயின்ஸ் மட்டுமின்றி, ஆர்ட்டிபிசியல் இன்டெலிஜென்ஸ், டேட்டா சயின்ஸ், மிஷின் லேர்னிங் ஆகிய படிப்புகளுக்கு இன்றைய மாணவர்கள் மத்தியில் அமோக வரவேற்பு காணப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம், மெக்கானிக்கல், ஹெல்த் கேர், பேங்கிங், டிராவல் என அனைத்து துறைகளுக்கும் இத்தகைய படிப்புகள் பயன்படுவதால், சர்வதேசஅளவில் இத்துறை சார்ந்த பட்டதாரிகளுக்கு வாய்ப்புகள் அதிகரித்து வருவதேயாகும்!