புதுச்சேரி: நாட்டின் அனைத்து பகுதிகளிலும் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதற்காக அடல் இன்குபேஷன் சென்டர் என்ற புத்தொழில் இயக்கத்தின் முதன்மை முயற்சி திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது.
இதில், அடல் டிங்கரிங் ஆய்வகம், அடல் தொழில் ஊக்குவிப்பு மையம், அடல் சமுதாய புத்தாக்க மையம் ஆகிய மூன்று கட்டமைப்புகள் உள்ளன. புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் அடல் இன்குபேஷன் சென்டர், அடல் டிங்கரிங் ஆய்வகம் அமைந்துள்ளது.
புத்தொழில் இயக்க மையமான அடல் இங்குபேஷன் சென்டர் புதிய கண்டுபிடிப்புகள், கருத்தாக்கத்துடன் வருபவர்களை ஒருங்கிணைத்து, ஸ்டார்ட் அப் நிறுவனங்களை உருவாக்கி வருகிறது. 65 ஸ்டார்ட் அப் நிறுவனங்களை அங்கீரித்துள்ளது.
இம்மையம், தொழில் துறையுடன் இணைந்து, மாநிலத்தில் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவித்து வேலைவாய்ப்பு அளிக்கும் தொழில் நிறுவனங்களாக மாற்றும் வகையில், வரும் 3 மற்றும் 4ம் தேதி ஆகிய தேதிகளில் கடற்கரை சாலையில் இருநாள் ஸ்டார்ட் அப் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.
ஸ்டார்ட் அப் இந்தியா திட்டம் மாநிலத்தின் நிலையான பொருளாதார வளர்ச்சியையும், அதிகளவிலான வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும் என்பதால் இக்கண்காட்சி முக்கியத்துவம் பெற்றுள்ளது.
என்ன சிறப்பு
கண்காட்சியில் ஸ்மார்ட் சிட்டி, தொலை தொடர்பு, ஐ.ஓ.டி., சைபர், டேட்டா பாதுகாப்பு, கல்வி, விவசாயம், வாகன போக்குவரத்து, சுற்றுச்சூழல் பாதிக்காத சுற்றுலா, டீப் டெக் என தொழில்நுட்ப வளர்ச்சிகளில் அசத்தலான கண்டுபிடிப்புகளில் முத்திரை பதித்துள்ள ஸ்டார்ட் அப் நிறுவனஙகள் கலந்துகொள்கின்றன.
விவசாய புரட்சி
ட்ரோன் தொழில்நுட்பம் பல்வேறு துறைகளில் புதிய கண்டுபிடிப்புகளையும், துரித சேவைகளையும் அளித்து வருகிறது. விவசாயத்தில் ட்ரோன் சேவையை புரட்சி ஏற்படுத்தியுள்ள சூழ்நிலையில் ட்ரோன்களை பற்றி அனைவரும் தெரிந்து கொள்ள முடியும்.
விண்வெளி குப்பைகள்
மனிதர்களால் விண்ணுக்கு அனுப்பப்பட்டு செயலிழந்த, வாழ்நாள் முடிந்த செயற்கைக் கோள், அதன் பாகங்கள் செயற்கை விண்வெளிக் குப்பைகளாக சுற்றி வருகின்றன. தற்போதைய சூழ்நிலையில் செயற்கைக் கோள்களின் தேவை அதிகமானதால் விண்வெளிக் குப்பைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
இந்த விண்வெளி குப்பைகளை அகற்றுவதற்கு தீர்வு காண முயற்சிக்கும் ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் ஸ்டாலும் இடம் பெற்றுள்ளதால் விண்வெளி செயற்கோளை புரிந்து கொள்ள இக்கண்காட்சி சிறந்த வாய்ப்பாக அமையும்.
மேலும் இன்றைய தொழில்நுட்ப யுகத்தில் தொழிற்சாலைகள் பலவும் சிக்கலான பிரச்னைகளுக்கு தீர்வினை எதிர்கொண்டுள்ளன. இப்படி சவாலை எதிர்கொண்டு இருக்கும் தொழிற்சாலைகளுக்கும், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மூலம் தொழில்நுட்ப தீர்வுகள் கிடைக்கும் சிறப்பு சந்திப்பு நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் முதலீட்டாளர்களும் கலந்து கொள்ள உள்ளனர்.
கடற்கரை சாலை காந்தி திடலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இக்கண்காட்சியை காண பொதுமக்களுக்கு அனுமதி இலவசம். தினமும் காலை 9:00 முதல் இரவு 7:30 மணி வரை பார்வையிடலாம்.
யார் வேண்டுமென்றாலும் வரலாம்
புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் உள்ள அடல் இங்குபேஷன் சென்டர்நிர்வாக இயக்குனர் சுந்தரமூர்த்தி கூறுகையில், ஸ்டார்ட் அப் என்பது பெரிய தொழில்நுட்பம் சார்ந்தது. நமக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என்று பலரும் நினைக்கின்றனர். இது கற்பனையானது. புதிய கண்டு பிடிப்புகள், புதிய கருத்தாக்கங்களுடன் வருபவர்களை அரவணைத்து, அவர்களை தொழில்நிறுவனங்களாக மாற்ற அனைத்து உதவிகளையும் செய்து தருகிறோம்.கருத்தாக்கத்தினை கண்டுபிடிப்பாக மாற்றுவது, அதற்கான தொழில்நுட்ப உதவி, கடனுதவி, மார்க்கெட்டிங் என அனைத்திற்கும் வழிகாட்டுகிறோம் என்றார்.