கோவை: ரேஸ்கோர்ஸிலுள்ள உணவு பகுப்பாய்வகம் மற்றும் நுண்ணுயிரியல் ஆய்வகம், அதிநவீன உபகரணங்களுடன் நவீனபடுத்தப்பட்டு, முழுமையான பயன்பாட்டுக்கு வந்தது.
கோவை ரேஸ்கோர்ஸிலுள்ள, உணவு பகுப்பாய்வு கூடம், தமிழகத்திலுள்ள ஆறு உணவு பகுப்பாய்வு கூடங்களில் ஒன்றாக இயங்கி வருகிறது.
கோவையில் இயங்கும் உணவு பகுப்பாய்வு கூடம் மூலமாக சென்னை, துாத்துக்குடி, விருதுநகர் மற்றும் திருச்சி ஆகிய நான்கு மாவட்டங்களிலிருந்து, பெறப்படும் உணவு மாதிரிகள் பகுப்பாய்வு செய்யப்படுகின்றன. நவீன உபகரணங்கள் வாயிலாக, உணவு மாதிரிகளில் உள்ள புரதம், கொழுப்பு, நார்சத்து, உணவில் சேர்க்கப்படும் ரசாயனங்களின் அளவு, செயற்கை வண்ணங்கள், கன உலோகங்கள், பூச்சிக்கொல்லிகள், நுண்ணுயிர் எதிர்ப்புகள், வைட்டமின்கள் மற்றும் கொழுப்பு அமிலங்கள் கண்டறியப்படுகின்றன.
மத்திய அரசு நிதி உதவி திட்டத்தின் கீழ், ரூ.4.63 கோடியில் 1,350 சதுர அடி பரப்பளவில், கோவை மாவட்ட உணவு பகுப்பாய்வகத்திலுள்ள, நுண்ணுயிரியல் பிரிவு அதிநவீன உபகரணங்களுடன் மேம்படுத்தப்பட்டது. தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளது.