எங்களுக்கு அவளை வெளியூர்களில் படிக்க வைப்பதில் ஒப்புதல் இல்லை. இது பற்றி விளக்கவும். எம்.பி.பி.எஸ்., படிக்க இடம் கிடைப்பது எவ்வளவு கடினம் என்பது நமது மாணவர்களுக்கு மட்டுமல்ல, அவர்களின் பெற்றோருக்கும் நன்றாக தெரியும். தசம வித்தியாசத்தில் சீட் கிடைக்காமல் துவண்டு போகும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. எனவே உள்ளூரில் தான் படிக்க வைப்போம் என யோசிக்கும் மனப்பாங்கை தயவு செய்து உடனடியாக மாற்றிக் கொள்ளுங்கள்.
தற்போது விடுதியில் படித்து வரும் தங்களின் மகள் எந்த மாநில எம்.பி.பி.எஸ்., என்றாலும் அதற்கு தயாராக இருப்பது மட்டுமல்லாமல் அதில் இடம் கிடைப்பது என்பதே எவ்வளவு சவாலானது என்பதையும் அறிந்திருப்பார். பிளஸ் 2வில் நுழையும் போதே எம்.பி.பி.எஸ்., குறிக் கோளுக்குத் தக்க அவரது படிப்பின் ஆழத்தையும் வேகத்தையும் அதிகரிப்பார் என்று நம்புகிறோம்.
அகில இந்திய அளவில் எம்.பி.பி.எஸ்.,படிப்புக்காக நடத்தப்படும் தேர்வுகளில் முக்கியமானது ஆல் இந்தியா பிரீ மெடிக்கல் நுழைவுத் தேர்வு, ஜிப்மர் தேர்வு, ஏ.எப்.எம்.சி., நுழைவுத் தேர்வு, அண்ணாமலைப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு, அம்ரிதா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் தேர்வு, சிஎம்சி வேலூர் நடத்தும் தேர்வு, எஸ்.ஆர்.எம்., இன்ஸ்டிடியூட் நடத்தும் தேர்வு ஆகியவை.
ஆல் இந்தியா பிரீ மெடிக்கல் தேர்வானது பொதுவாக ஏப்ரல் மாதத்தில் நடத்தப்படுகிறது. ஏ.ஐ.ஐ.எம்.எஸ்., எனப்படும் அகில இந்திய மருத்துவக் கழகம் நடத்தும் தேர்வில் பயாலஜி, பாட்டனி, சுவாலஜி, இயற்பியல், பொதுத் திறனறியும் பகுதி, லாஜிகல் ரீசனிங், ஆங்கிலம் மற்றும் காம்ப்ரிஹென்சன்
பகுதிகளிலிருந்து கேள்விகள் அமையும். புதுச்சேரியில் உள்ள ஜிப்மரிலும் எம்.பி.பி.எஸ்., நடத்தப்படுகிறது. இதற்கும் போட்டித் தேர்வு உண்டு. இந்தத்
தேர்வுகள் அனைத்துமே கடும் போட்டியை உள்ளடக்கியவை என்பது உண்மை தான். ஆனால் மிக தெளிவான திட்டமிடலுடன் கடும் உழைப்பை தொடர்ந்து விடா முயற்சியுடனும் நம்பிக்கையுடனும் செயல்படுத்தும் மாணவ மாணவியர் இதைப் பெறுவது முடியாத காரியமல்ல. இது போன்ற தேர்வுகளுக்கு சிறப்புப் பயிற்சி தரும் நிறுவனங்களில் ஒன்றில் உடனே உங்களது மகளை சேரச் சொல்லுங்கள்.
இவை தரும் முந்தைய ஆண்டு வினா விடைகள் பெரிதும் உதவும். மேலும் இவை சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தை ஆதாரமாகக் கொண்டு இருப்பதால் இப்போதிருந்தே இவற்றோடு அறிமுகமாவது உங்கள் மகளுக்குக் கட்டாயம் உதவும். உங்களது விரிவான கடிதம் பெற்றோர் என்ற முறையில் உங்களது தீவிரமான ஆர்வத்தையும் காட்டுகிறது. இது போன்ற பின் புலத்திலிருந்து தான் வெற்றி வாரிசுகள் உருவாகின்றன என்பதை நாம் அவ்வப்போது பார்த்து வருகிறோம்.