திருவனந்தபுரம்: சுகாதாரத் துறையில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் சமூக வலைதளங்கள் மற்றும் &'யு டியூப்&'பில் கணக்கு துவங்கவும், அதில் இயங்கவும் தடை விதித்து பிறப்பித்த உத்தரவுக்கு கடும் எதிர்ப்பு எழுந்ததால், அதை கேரள சுகாதாரத் துறை வாபஸ் பெற்றது.
கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.
இங்குள்ள சுகாதார சேவைகள் இயக்குனர் சமீபத்தில், சுகாதாரத் துறையில் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பினார். அந்த அறிக்கையில், அரசு ஊழியர்கள் சமூக வலைதளங்களில் இருப்பது விதிமீறலுக்கு வழிவகுக்கும், மேலும் யு டியூப், இன்ஸ்டாகிராம் போன்றவற்றை பயன்படுத்தி பண ஆதாயம் பெறக் கூடிய வாய்ப்பு உள்ளது.
இதுவும் விதிமுறைகளுக்கு முரணானது. எனவே, சுகாதாரத் துறை அரசு ஊழியர்களுக்கு சமூக வலைதளங்களில் கணக்கு இருக்கக்கூடாது என கூறப்பட்டிருந்தது.
இதற்கு, பல்வேறு தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்தது. சுகாதாரத் துறையின் உத்தரவுக்கு கண்டனம் தெரிவித்து, கேரள அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் வெளியிட்ட அறிக்கை:
சுகாதாரத் துறையில் நடக்கும் பொய்யான, அறிவியலுக்குப் புறம்பான பிரசாரங்களுக்கு எதிராக சமூக வலைதளங்கள் வாயிலாகவே சுகாதாரப் பணியாளர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர்.
அதற்கு தடை விதிக்கும் உத்தரவு மிகவும் பிற்போக்கானது. சுகாதாரத் துறையின் இந்த செயல், அரசியலமைப்பு வழங்கும் பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்திற்கான அடிப்படை உரிமையை மீறுவதாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டது.
இதைத் தொடர்ந்து, ஏற்கனவே வெளியிடப்பட்ட சுற்றறிக்கை நிர்வாகக் காரணங்களுக்காக திரும்பப் பெறப்படுவதாக மாநில சுகாதார சேவைகள் இயக்குனர் தெரிவித்தார்.