கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆய்வக உதவியாளர்களுக்கான பயிற்சி வகுப்பு, நேற்று துவங்கியது. 6 நாட்கள் வீதம், 4 சுற்றுகளில் இப்பயிற்சி வழங்கப்படவுள்ளது.
ஒண்டிப்புதுார் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் துவங்கிய இப்பயிற்சியை, மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் லட்சுமி நரசிம்மன் துவக்கி வைத்தார். முதுநிலை விரிவுரையாளர் கணேஷ்மூர்த்தி, விரிவுரையாளர்கள் லாவண்யா, மகாலட்சுமி, பேரூர் வட்டார வள மைய பயிற்றுநர் பாலகோமதி ஆகியோர் பயிற்சி வழங்கினர்.
பயிற்சி வகுப்பில், பள்ளிகளில் செயல்படும் அடல் டிங்கரிங் ஆய்வகம், உயர் தொழில்நுட்ப ஆய்வகம், மெய்நிகர் வகுப்பறை வாயிலாக கற்பித்தல், அறிவியல், மொழி, தொழில் கல்வி, கணிதம், புவியியல் ஆய்வகங்கள் போன்றவற்றை, ஆய்வக உதவியாளர்கள் திறம்பட பராமரித்தல், பதிவேடுகளைக் கையாளுதல், பாதுகாப்பு நடவடிக்கைகளை மேகொள்ளுதல், திறன்களை மேம்படுத்துதல் உள்ளிட்டவை குறித்து பயிற்சி வழங்கப்பட்டது. 48 ஆய்வகப் பணியாளர்கள் பங்கேற்று பயிற்சி பெற்றனர்.