சென்னை: ஆசிரியர் பணிக்கான தொடக்க கல்வி டிப்ளமா தேர்வுக்கு, ஏப்ரல், 1 முதல் தனி தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்.
அரசு தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா வெளியிட்ட செய்திக்குறிப்பு:
ஆசிரியர் பணிக்கான, தொடக்க கல்வி டிப்ளமா தேர்வு, ஜூன், 20ல் துவங்கி ஜூலை, 21ல் முடிகிறது. இந்த தேர்வு எழுத விரும்பும் தனித்தேர்வர்கள், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களின் வழியே, வரும், 1ம் தேதி முதல், 6ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இந்த காலகட்டத்தில் விண்ணப்பிக்க தவறுவோர், ஏப்., 8, 10ம் தேதிகளில் தத்கல் சிறப்பு திட்டத்தில், கூடுதலாக, 1,000 ரூபாய் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப பதிவின் போது, தேர்வர் ஏற்கனவே தேர்ச்சி பெற்ற மதிப்பெண் சான்றிதழ்களின், அனைத்து நகல்களையும் இணைத்திருக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.