நாகப்பட்டினம்: நாகையில், 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் 8ம் வகுப்பு மாணவியர், பாடப்பிரிவில் உள்ள ஆஸ்திரேலியா விபரங்களை, அந்நாட்டில் பயிலும் மாணவியுடன் காணொளி வாயிலாக உரையாடி, கேட்டறிந்து நெகிழ்ச்சி அடைந்தனர்.
நாகை மாவட்டம் ஒரத்துாரில் சிதம்பரனார் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. கடந்த 1923ம் ஆண்டு துவக்கப்பட்ட பள்ளியில் தற்போது 131 மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர்.
எட்டாம் வகுப்பு சமூக அறிவியலில் பல்வேறு கண்டங்களை பற்றிய பாடம் உள்ளது. இதில் ஆஸ்திரேலியா கண்டத்தின் புவியியல் விபரங்களை மாணவர்கள் கற்க வேண்டும். இதற்காக ஆஸ்திரேலியாவில் முதுகலை பயிலும் பூடான் நாட்டு மாணவி சோனம் யாங்கி என்பவருடன், காணொளி வாயிலாக, 8ம் வகுப்பு மாணவ - மாணவியர் உரையாடினர்.
ஆஸ்திரேலியாவின் தலைநகரம், தட்ப வெப்பநிலை, ஆறுகள், தாவரங்கள், மரங்கள், மலைகள், விலங்குகள், உணவு, பழக்க வழக்கங்கள், ஆடைகள் பற்றிய மாணவியர் கேள்விகளை, ஆசிரியர் பால சண்முகம், ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க, மாணவியருக்கு புரியும் வகையில் சோனம் யாங்கி விளக்கினார்.
மேலும் அந்நாட்டு போக்குவரத்து, வசிப்பிடங்கள் போன்ற கேள்விகளுக்கு காணொளி மூலமாக மாணவர்களுக்கு காட்சிப்படுத்தினார்.
மாணவ - மாணவியர் கூறுகையில், ஆஸ்திரேலியாவை பற்றி வகுப்பறையில் படிப்பதை விட, அந்நாட்டிற்கே சென்று வாழ்விடங்கள், கலாசாரத்தை பார்வையிட்டது போல் மிக நெகிழ்ச்சியாக இருந்தது என்றனர்.
ஆசிரியர் பாலசண்முகம் கூறுகையில், மாணவர்கள் புத்தகத்தில் படித்து தெரிந்து கொள்வதை விட, அவ்விடங்களை நேரில் பார்வையிட்டால் எளிதாக புரிதல் இருக்கும்.
ஆஸ்திரேலியாவிற்கு நேரில் செல்ல முடியாது என்பதால், அங்கு வசிக்கும் என் முன்னாள் மாணவி பூடானைச் சேர்ந்த சோனம் யாங்கியை தொடர்பு கொண்டு மாணவர்களுக்கு அந்நாட்டு கலாசாரம், புவியியல் அமைப்புகளை காட்சிப்படுத்தி விளக்க கோரினேன். கடந்த 1997 ம் ஆண்டு முதல் 1999 ம் ஆண்டுகள் வரை பூடானில் ஆசிரியராக பணியாற்றி உள்ளேன் என்றார்.