கோவை: கோவை வேளாண் பல்கலை மாணவர்களிடம், வாக்காளர் அடையாள அட்டை விபரங்களை சேகரிக்கவில்லை; போலியான ஆவணம் தயாரித்து, புகார் கூறியுள்ளனர் என வேளாண் பல்கலை டீன் வெங்கடேச பழனிசாமி கூறியுள்ளார்.
தமிழக கவர்னர் ரவி அறிவுறுத்தலின் படி, கோவை கோவை வேளாண் பல்கலை மாணவ, மாணவியரிடம் வாக்காளர் அடையாள அட்டை விபரங்கள் பெறுவதை தடை செய்ய வேண்டும். கவர்னர் ரவி மற்றும் வேளாண் பல்கலை துணைவேந்தர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென, திராவிடர் பண்பாட்டு கூட்டியக்கத்தை சேர்ந்த வக்கீல்கள், கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனு கொடுத்தனர்.
இதுதொடர்பாக, வேளாண் பல்கலை டீன் வெங்கடேச பழனிசாமியிடம் கேட்டதற்கு, அவர் கூறியதாவது:
வேளாண் பல்கலை மாணவர்களுக்கு திங் டேங்க் என்ற திட்டத்தில் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதற்காக மாணவர்களின் விபரம் சேகரிக்கப்பட்டது. இத்தகவல், 2023 முதல் இணைய தளத்தில் இருக்கிறது.
ஓட்டுப்பதிவை அதிகரிக்க, மாவட்ட நிர்வாகம் தரப்பில் மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டது. அதற்கான நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதுபோன்ற சமயத்தில், இணைய தளத்தில் உள்ள தகவல்களை பதிவிறக்கம் செய்து, வாக்காளர் அட்டை விபரங்களை போலியாக சேர்த்து, புகார் கொடுத்திருக்கின்றனர். பல்கலை சார்பில் மாணவர்களிடம் வாக்காளர் அடையாள அட்டை விபரங்கள் பெறவில்லை.
இவ்வாறு, அவர் கூறினார்.