சமீப காலமாக இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (ஐ.ஐ.டி.,) போன்ற நிறுவனங்களில், பயிலும் மாணவர்கள், உளவியல் பிரச்சனைகளால் தற்கொலை செய்வது அதிகரித்துள்ளது.
இதைத் தடுக்க, 24 மணி நேரம் இயங்கும் ஆலோசனை மையங்கள், ஹெல்ப் லைன் உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளில் ஐ.ஐ.டி., கல்வி நிறுவனத்தில் ஏற்பட்ட மன அழுத்தம், தாழ்வு மனப்பான்மை, பண பிரச்சனை போன்றவை காரணமாக 30 மாணவர்கள் தற்கொலைக்கு முயன்றுள்ளனர். 872 பேர் உளவியல் பிரச்சனைக்கு ஆட்பட்டுள்ளனர்.
தற்கொலைக்கு முயன்ற மாணவர்களில், 12 பேர் இறந்துள்ளனர். இவர்களில், எஸ்.சி/ எஸ்.டி/ ஓ.பி.சி., பிரிவை சேர்ந்த மாணவர்கள் மட்டும் 7 பேர். இதுகுறித்து ஐ.ஐ.டி., கவுன்சில் கூட்டத்தில், கான்பூர் ஐ.ஐ.டி., தலைவர் எம். ஆனந்த கிருஷ்ணன் பேசும் போது, அனைத்து ஐ.ஐ.டி., கல்வி நிறுவனங்களிலும், இந்த ஆண்டில் 24 மணி நேரம் இயங்கும் நன்கு கட்டமைக்கப்பட்ட ஆலோசனை மையம், ஹெல்ப் லைன் அமைக்க முடிவு செய்துள்ளோம்.
தொடர்ந்து, ஐ.ஐ.எம்/என்.ஐ.டி/சி.எப்.டி., போன்ற நிறுவனங்களில் தொடங்கப்படும். இந்த ஆலோசனை மையத்தில் ஒவ்வொரு மாணவரின் தனித் தன்மை, பிரச்சனைகளை, சம்பந்தப்பட்ட மாணவர்களிடம் தனியே கலந்து ஆலோசித்து தீர்க்கப்படும். இதன் நடவடிக்கைகள், ஒரு குழு மூலம் கண்காணிக்கப்படும். உளவியல் பிரச்சனைகளை தீர்க்க, உளவியல் நல மையமும் அமைக்கப்படும் என்றார்.