வானியல் துறை படிப்புகள் அதிசயம், ஆச்சரியம் மிக்கவை. இதில் நாளுக்கு நாள் புதுப்புது விஷயங்கள் கண்டுபிடிக்கப்படுவதால் ஆர்வத்துடன் இந்த துறை படிப்புகளை பயில முடியும். வானியல் என்பது மிக பழமையான அறிவியல். இந்த துறை படிப்புகளில் கோள்கள், அதில் உள்ள பொருட்கள், செயல்பாடுகள், தோற்றங்கள் ஆகியவை கற்றுத் தரப்படுகிறது. இந்த துறை பணிகள், ஆராய்ச்சியை மையமாக கொண்டதால் கடின உழைப்பு, அர்ப்பணிப்பு உணர்வு தேவை. எல்லாவற்றுக்கும் மேலாக தனிப்பட்ட ஆர்வம், முயற்சி இருந்தால் வானியலில் முத்திரை பதிக்கலாம். பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 முடித்தவுடன், வானியல் துறையில் ஆர்வமிருப்பவர்கள் இளநிலை வானியல் படிப்புகளை தேர்ந்தெடுத்து படிக்கலாம். இத்துறையில் டிப்ளமோ, சான்றிதழ் படிப்புகள், இளநிலை, முதுநிலை, பிஎச்.டி., படிப்புகள் உள்ளன. இந்தியாவில் உள்ள முக்கிய பல்கலைக்கழகங்கள் அனைத்திலும் வானியல் படிப்புகள் கற்றுத்தரப்படுகின்றன. வானியல் துறையில் இந்தியா, வெளிநாடுகளில் ஏராளமான பணி வாய்ப்புகள் உள்ளன. ஆரம்ப நிலையில் 10 ஆயிரம் ரூபாய் முதல் ஊதியம் வழங்கப்படுகிறது. பின் திறமை, அனுபவத்துக்கு ஏற்ப ஊதியம் பல மடங்கு உயரும். விண்வெளியில் இயற்கையின் தன்மையை ஆராய்வதால் ஆர்வத்துடன் இத்துறையில் பணியாற்றலாம்.