உலகிலேயே மிக பாதுகாப்பான நாடுகளில் ஒன்றாகக் கருதப்படுவது கனடா. இங்கு படிப்பதற்காக செல்லும் வெளிநாட்டினரும் அந்த நாட்டை
பாதுகாப்பானதாகவே கருதுகின்றனர். பொதுவாகவே பன்முகக் கலாச்சாரங்களையும் ஏற்றுக்கொள்வதாலும் அமைதியான நாடாக விளங்குவதாலும் கனடாவிற்குச் செல்ல வேண்டும் என்று விரும்பும் இந்திய மாணவர்கள் அதிகம். சிறப்பான நெட்வொர்க்கைக் கொண்டிருப்பதால், தகவல் தொடர்பு மற்றும் கலாச்சார சமச்சீர்த் தன்மை ஆகியவை இந்த நாட்டின் சிறப்பம்சங்கள். இதன் கல்வி நிறுவனங்களும் உலகத் தரம் வாய்ந்தவையாக விளங்குகின்றன.
இவற்றின் இன்ஜினியரிங் படிப்புக்கான சேர்க்கையானது டிசம்பர் முதல் பிப்ரவரி மாதங்களில் ஒவ்வொரு ஆண்டும் முடிவடைந்து விடுகின்றன. அமெரிக்க பல்கலைக்கழகங்களின் படிப்புக்கான சேர்க்கை முடிவதற்குள் இவை முடிவடைந்து விடுகின்றன. சேர்க்கை முறைகள் சற்றே எளிதாக இருக்கின்றன. எனினும் இதன் புகழ் பெற்ற நிறுவனங்களில் சேருவது அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் போலவே கடினமாக உள்ளது. டோபல் அல்லது ஐ.இ.எல்.டி.எஸ்., ஜி.பி.ஏ., தேர்வுகளில் தகுதி பெறுபவர் மட்டுமே இதன் இன்ஜினியரிங் படிப்புகளில் சேரலாம்.
ஆஸ்திரேலியா, பிரிட்டன் மற்றும் அமெரிக்கக் கல்விக்கு ஆகும் செலவை விட இங்கு கட்டணங்கள் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. காமன்வெல்த் உதவித் தொகையை கனடாவில் படிக்கும் நமது மாணவர்கள் பெற முடியும். ஆனால் இந்த உதவித் தொகையானது பட்ட மேற்படிப்புகளுக்கு மட்டுமே தரப்படுகிறது.