நேர மேலாண்மைத் திறனை, பொதுவாக, தங்களின் பெற்றோரிடமிருந்தே, பிள்ளைகள் கற்றுக்கொள்கின்றனர். பெற்றோரிடம், நேர மேலாண்மை பழக்கம் இல்லையெனில், குழந்தைகளிடம் அதை எதிர்பார்க்க முடியாது.
நிகழ்கால உலக குழந்தைகளின் வாழ்க்கை முறையானது, முந்தைய காலத்தைப் போன்றதல்ல. பல்வேறுவிதமான புதிய அம்சங்கள் மற்றும் நெருக்கடியான அம்சங்களால், அவர்கள் மனதளவில் அதிக பாரத்துடன் உள்ளனர். பள்ளி செல்வது, வீட்டுப்பாடம், இசைப் பயிற்சி, நீச்சல் பயிற்சி, விளையாட்டு, டியூஷன், பல்வேறுவிதமான திறன் போட்டிகள் மற்றும் மத நடவடிக்கைகள் போன்றவை, குழந்தைகளிடம் அதிக அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன. பெற்றோர்களும், தங்கள் அலுவலகங்களில் ஓவர் டைம், அலுவலக நெருக்கடிகள் போன்ற விஷயங்களால் பாதிக்கப்படுகின்றனர். மேலும், பெற்றோருக்கும், குழந்தைகளுக்கும், அலுவலகம் மற்றும் பள்ளி சென்று வருவதற்கான போக்குவரத்து நேரத்தை மேலாண்மை செய்வதும், சவாலான ஒன்றாக திகழ்கிறது.
இத்தகைய தினசரி நடவடிக்கைகளை, டென்ஷன் இல்லாமல், இலகுவாக நடத்திச்செல்ல, குடும்பமே இணைந்து, நேர மேலாண்மை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.
எந்தவொரு குழந்தையும் பிறக்கும்போதே அமைப்பாக்கத் திறனை பெற்றிருப்பதில்லை. பெற்றோர்தான், அந்த திறனை, குழந்தைகளுக்கு கற்றுத்தர வேண்டியுள்ளது.
ஒழுங்குமுறையான பழக்கவழக்கமற்ற மற்றும் குழப்பமான மனநிலைக் கொண்ட பெற்றோருக்கு வழக்கமாக, அதேபோன்ற மனோநிலை கொண்ட குழந்தைகளே இருக்கும். தனது தனிப்பட்ட வேலைகளை முடிப்பதற்கான திட்டங்களை வகுத்து, அத்திட்டத்தை, பிசகாமல் பின்பற்ற வேண்டும். தங்கள் குழந்தை, சிறப்பான நேர மேலாண்மைத் திறனை பெற வேண்டுமானால், பெற்றோரும், அதற்கேற்ப தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும்.
குடும்ப அமைப்பை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். குடும்பமாக இணைந்து அமர்ந்து, அடிக்கடி கலந்தாலோசிக்க வேண்டும். அன்றாடம் செய்ய வேண்டிய செயல்கள் குறித்து விவாதிக்கையில், அனைவரின் கருத்துக்களையும் கேட்க வேண்டும். ஒவ்வொருவருக்கும் சில பொறுப்புகளை ஒதுக்க வேண்டும். தனக்கு ஒதுக்கப்பட்டதை சிறப்பாக செய்து முடிப்பவருக்கு, பாராட்டோ, பரிசோ தரலாம். தனது கடமையில் பொறுப்பின்றி இருக்கும் குழந்தைக்கு, அதன் பின்விளைவுகளைப் பற்றி எச்சரிக்கை செய்ய வேண்டும்.
குடும்பத்தில் ஒவ்வொருவர் செய்ய வேண்டிய வேலைகளுக்கும் ஒரு சார்ட் தயார் செய்து வைத்துக் கொள்ளலாம். சிறிய குழந்தைகளாக இருந்தால், அவர்களுக்கு, படங்களைக் கொடுக்கலாம். இதன்மூலம், அவர்கள் தங்களின் கடமைகளின்பால் கவரப்படுவார்கள்.
இவ்வாறு தயாரிக்கப்படும் அனைத்து சார்ட்டுகளும் ஒரே இடத்தில் இருந்தால், குடும் பஉறுப்பினர்கள், அவற்றை எளிதாக பார்த்து, தங்கள் செயல்களை திட்டமிட்டுக்கொள்ள வசதியாக இருக்கும்.
குழந்தைகள், நேர மேலாண்மையை சிறப்பாக கடைபிடிக்கத் தேவையான Time Clock, காலண்டர் மற்றும் கைக்கடிகாரம் போன்றவைகளை அவர்களுக்கு வாங்கிக்கொடுக்க வேண்டும். இப்பொருட்கள் புதியனவாகவும் இருக்கலாம் அல்லது ஏற்கனவே பயன்படுத்தப்பட்டதாகவும் இருக்கலாம். ஆனால், அதன் தரம் நன்றாக இருக்க வேண்டும். அதுதான் முக்கியம்.
நீங்கள், குழந்தையின் செயல்பாட்டைக் குறித்து சொல்லும் கருத்துக்களில் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில், உங்கள் குழந்தையை, அக்கருத்துக்கள் நேரடியாக பாதிக்கக்கூடும். உங்கள் குழந்தையால், நேர மோலாண்மை பயிற்சியில் மிகவும் சிரமப்படுகிறது என்றால், வேறு ஏதோ பிரச்சினை இருக்கிறது என்று அர்த்தம். அப்போது, கவுன்சிலிங்கோ அல்லது சிகிச்சையோ அதற்கு தேவைப்படலாம். மற்றபடி, இந்த விஷயத்தில், பெற்றோர்தான், குழந்தைகளின் முன்மாதிரிகள் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.