குழந்தைகளுக்கு ஏற்ற கல்வி

எழுத்தின் அளவு :

உண்மை உயர்ந்தது, உண்மையான வாழ்க்கை வாழ்வது அதைவிட உயர்ந்தது என்ற கருத்துக்கு ஏற்ப திகழும் கலாம் தன் எண்ணங்களை இங்கு பகிர்ந்து கொள்கிறார்...



பள்ளிக் குழந்தைப் பருவம்தான் ஒவ்வொருவரின் வாழ்க்கையில் சிறப்பாக கற்றுக் கொள்ளக்கூடிய காலம். 6 வயது முதல் 17 வயது வரைதான் நன்றாக கற்றுக் கொள்ளும் வயது. பள்ளியில் மாணவர்கள் செலவிடும் நேரம்தான் அவர்கள் படிப்பதற்கான சிறப்பான காலம்.


படிக்கும் சூழ்நிலையை உருவாக்குதல், லட்சியத்தை அடையும்
நோக்குடன் கற்றுக்கொடுத்தல் மற்றும் மதிப்பீடு அடிப்படையிலான
கல்வி திட்டம்தான் தற்போது தேவைப்படுகிறது.



என்னிடம் ஒரு குழந்தையை ஏழு ஆண்டுக்கு கொடுங்கள். பின்னர்
கடவுளோ அல்லது சாத்தானோ அக்குழந்தையை எடுத்து செல்லட்டும். ஆனால் அந்த குழந்தையை அவர்களால் மாற்ற முடியாது என்றார் சிறந்த ஆசிரியரான பெஸ்டோலோஸ்ஸி. இதுதான் சிறந்த ஆசிரியரின் சக்தி.



ஒவ்வொரு வாரத்திலும் ஒரு மணி நேரம்  சாதனையாளர்களை பற்றி அறிமுகப்படுத்தப்படும் ஒரு வகுப்பு இடம்பெற வேண்டும். இளம் சிந்தனையாளர்களை உயர்த்துவது என்ற அடிப்படையில் இந்த வகுப்பு அமைய வேண்டும். புத்தர், கன்பூசியஸ், செயின்ட் அகஸ்டின், கலீபா உமர், மகாத்மா காந்தி, ஐன்ஸ்டீன், ஆப்ரஹாம் லிங்கன் உள்ளிட்ட சாதனையாளர்கள், தலைவர்கள், விஞ்ஞானிகள் பற்றியும் நமது நாகரிகம் தொடர்பான விஷயங்களையும் கற்றுத் தர வேண்டும்.


 


குழந்தை வளர்ந்து 17 வயதை அடையும் போது, அறிவுப்பூர்வமான குடிமகனாக்க தந்தை, தாய் மற்றும் ஆசிரியர் தலைமையேற்று செயல்பட வேண்டும். 20ம் நூற்றாண்டை நாம் அறிவு நூற்றாண்டாக கொள்ளலாம். ஆனால் 21ம் நூற்றாண்டை அறிவு நிர்வாக நூற்றாண்டாகக் கருத வேண்டும்.



அறிவு வளத்தை நிர்வகிப்பது எப்படி என்பதை குழந்தைகள் கற்றுக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு பள்ளியிலும் உள்ள மாணவர்கள் தாங்கள் கற்றுக் கொள்வதற்கு உதவும் புதிய தொழில் நுட்பத்தை அறிந்து கொள்ள வேண்டும். கம்ப்யூட்டர்கள், ஆய்வுக்கூட வசதிகளை பள்ளிகளில் ஏற்படுத்த வேண்டும். இன்டர்நெட் வசதி மூலம் குழந்தைகள் கற்றுக் கொள்ளும் ஓர் அருமையான சூழ்நிலையை உருவாக்க வேண்டும்.



குழந்தைகள் வளர்ந்து பெரியவர்கள் ஆகும் போது தொழில்முனையும் திறனை ஊக்குவிக்கும் வகையில், பள்ளியிலேயே அவர்களுக்கு
அத்திறனை கற்றுக் கொடுக்க வேண்டும். பெரிய அளவிலான லாபத்துக்காக அவர்கள் கணித்துணர்ந்த இடர்பாடுகளை சந்திக்கும் திறனை வளர்க்க வேண்டும். நேர்மையான வழியில் நடக்க அவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். இதுபோன்ற விஷயங்கள்தான் அவர்கள் சவால்களை சந்திக்கும் ஆற்றலைத் தரும்.



நேர்மையான தலைமைப் பண்பையும் இளம் மாணவர்களிடையே உருவாக்க வேண்டும். இது இருவகைப்படும். ஒன்று, சமுதாயத்தின் நலனுக்காக கனவுகளையும் லட்சியங்களையும் சுமப்பவராக அவர் உருவாக வேண்டும். மற்றொன்று, நேர்மையான செயல்களை செய்து மற்றவர்களையும் நேர்மையாக நடந்து கொள்ளும் ஆர்வத்தை துவண்டுபவராகவும் இருக்க வேண்டும்.



ஆய்வுத்தன்மை, கற்பனைத் திறன், தொழில்நுட்பம், தொழில்முனையும் திறன் மற்றும் நேர்மையான தலைமைப்பண்பு ஆகிய ஐந்தும் கல்வி கற்கும் போதே குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கப்பட வேண்டும்.



பள்ளிகளில் பாடத்திட்டங்களை நிர்வகிக்க ஓர் அரசியல் சாராத நிலைக்குழு உருவாக்கப்பட வேண்டும். பாடத்திட்டத்தில் புதிய பாடங்களை சேர்ப்பது மற்றும் நீக்குவது தொடர்பாக இக்குழு முடிவு செய்ய வேண்டும். எதிர்காலத்தில் குழந்தைக்கு பயன்படும் விஷயங்களை மட்டுமே பாடத்திட்டத்தில் புதிதாக சேர்க்க வேண்டும். கடல் அறிவியல், நேனோ டெக்னாலஜி, கழிவு நிர்வாகம் ஆகியன அறிவியல் பாடத்திட்டத்தில் ஒரு பகுதியாக அமைய வேண்டும். பாடத்திட்டம் குழந்தைகளின் மனதில் சுமையை ஏற்படுத்தாமல் கற்பதை அவர்கள் இனிமையாகக் கொள்ளும்படி அமைய வேண்டும்.



பாடத்திட்டம் வேலைவாய்ப்புக்கு உதவும்படி இருக்க வேண்டும். பரா
மரிப்புத்துறை , கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக்ஸ், கால் சென்டர், பாராமெடிக்கல், நர்சிங், மார்க்கெட்டிங், சுற்றுலா மற்றும் ஓட்டல் உள்ளிட்ட சேவைத் துறைகளில் மாணவர்கள் வேலை பெறுவதற்கான திறன்கள் பள்ளியிலேயே வளர்க்கப்பட வேண்டும். ஒருவேளை பிளஸ் 2 முடித்தவுடன் அவர்கள் வேலைக்கு செல்ல வேண்டும் என்ற நிலையில் அவர்கள் வேலைவாய்ப்பு பெற வேண்டும். நமது கல்வித்திட்டத்தில் இளம் அறிவு மொட்டுகள் அடையாளம் காணப்பட்டு, அவர்கள் வெளியுலகுக்கு அறிமுகம் செய்யப்பட வேண்டும்.



உங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்



- டாக்டர் அப்துல் கலாம்


 

Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us