தினமலர் கல்விமலர் இணையதளம் வழியாக மாணவர்கள் மற்றும் வாசகர்கள் அனுப்பிய கேள்விகளுக்கு டாக்டர் அப்துல் கலாம் பதில்.
ஏழ்மையை ஒழிக்க என்ன செய்ய வேண்டும்?
- தினேஷ், சி.ஐ.டி., பாலிடெக்னிக், கோவை
கிராமப்புறங்களிலும் நகர்ப்புறங்களுக்கு இணையான வசதிகளை உருவாக்கித் தரும் புறா திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம்தான் கிராமப்புறங்களிலும் நகர்ப்புறங்களிலும் ஏழ்மையை ஒழிக்க முடியும். இது கிராமப்புற மக்களின் தொழில் வாய்ப்பையும் தொழில்முனையும் திறனையும் அதிகரித்து அவர்களது வாழ்க்கையை வளம் பெற செய்யும்.
இந்திய மாணவர்களிடமிருந்து எதிர்பார்ப்பது என்ன?
- கார்த்திக், பி.எஸ்.ஜி., பாலிடெக்னிக் கல்லூரி, கோவை
எதிர்வரும் 2020ம் ஆண்டில் இந்தியா வல்லரசாக வேண்டும். அந்த வல்லரசான நாட்டில் மாணவர்கள் வாழ வேண்டும் என்பதுதான் எதிர்பார்ப்பு. இந்த சூழலில் மாணவர்களுக்கு நல்ல வாய்ப்பும் வளர்ச்சியும் ஏற்படும்.
எதிர்கால சந்ததியினரிடம் எதிர்பார்ப்பது என்ன?
- மதுமிதா, ஸ்ரீசாரதா வித்யாவனம் மெட்ரிக் பள்ளி, மதுரை
இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதை கனவாகக் கொண்டு மாணவர்கள் செயல்பட வேண்டும். நீங்கள் ஒரு லட்சியத்தை கொண்டு, எதிர்வரும் தடைகளை தகர்த்து, சிறப்படைய வேண்டும். விடுமுறை காலங்களில் மாணவர்கள் தங்கள் லட்சியங்களை தீர்மானித்துக் கொள்ளும் வாய்ப்பாக கொள்ள வேண்டும். இயலாதவர்களுக்கு தங்களால் இயன்ற உதவியை செய்ய வேண்டும்.