பிரதக்ஷனா (பிளஸ் 2 மாநில 3 ம் இடம்)
எழுத்தின் அளவு :
டிவி பார்ப்பதை தவிர்த்து, படிப்பில் தீவிர கவனம் செலுத்தியதால் சாதிக்க முடிந்ததாக, மாநில அளவில் மூன்றாமிடம் பிடித்த ராஜபாளையம் மாணவி பிரதக்ஷனா தெரிவித்துள்ளார். ராஜபாளையம் சின்மயா வித்யாலயா பி.ஏ.சி.ராமசாமிராஜா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி பிரதக்ஷனா. பிளஸ் 2 தேர்வில் 1185 மதிப்பெண்கள் பெற்று, மாநில அளவில் மூன்றாமிடம் பெற்றார். இவர் தமிழ் 194, ஆங்கிலம் 193, கணிதம் 200, இயற்பியல் 199, வேதியியல் 200, உயிரியல் 199 மதிப்பெண் பெற்றுள்ளார்.
இவர் கூறியதாவது: 10ம் வகுப்பில் திண்டுக்கல் மாவட்ட அளவில் (மெட்ரிக் பாடத்திட்டம்) முதலிடம் பெற்றேன். இதே ஊக்கத்துடன், பிளஸ் 2வில்
மாநில அளவில் ரேங்க் பெற வேண்டும் என்ற லட்சியத்துடன் படித்தேன். பெற்றோரும், ஆசிரியர்களும் என்னை ஊக்கப்படுத்தினர். அடிக்கடி தேர்வுகள் வைத்து நான் பெற்ற மதிப்பெண்களை அலசி ஆராய்ந்து ஆலோசனை வழங்கியும், கடினமான பாடங்களில் ஏற்படும் சந்தேகங்களை உடனுக்குடன் புரிய வைத்தும் ஆசிரியர்கள் உதவினர்.
தினமும், இரவு 12 மணி வரை படிப்பேன். கடந்த பொதுத்தேர்வுகளில் கேட்கப்பட்ட முக்கிய கேள்விகள், திருப்புதல் தேர்வுகளில் கேட்கப்பட்ட கேள்விகள் போன்றவற்றை பலமுறை படித்தேன். தீவிரமாக பயிற்சி செய்ததால், பொதுத்தேர்வில் கேள்விகள் அனைத்தும் எளிதாக இருந்தன. டிவி பார்ப்பதை முற்றிலும் தவிர்த்துவிட்டேன். சினிமா உள்ளிட்ட பொழுது போக்கு விஷயங்களையும் தவிர்த்தேன். இவ்வாறு பிரதக்ஷனா கூறினார்.