நல்ல சம்பளத்தில், தலைசிறந்த நிறுவனத்தில் வேலை... இதுவே இன்றைய பெற்றோர்களது பிரதான எதிர்பார்ப்பாக உள்ளது. இதை உணர்ந்து, சிறப்பான பாடத்திட்டத்தை எங்களது மாணவர்களுக்கு வழங்குகிறோம். ஒவ்வொரு 6 மாதத்திற்கும் தொழில் நிறுவனங்களை சேர்ந்த வல்லுநர்கள், கல்வி நிபுணர்கள் மற்றும் பேராசிரியர்கள் ஆகியோர்களது ஆலோசனைகளின்படி, பாடத்திட்டத்தை தொடர்ந்து மேம்படுத்துகிறோம். பைத்தான், கிளவுட் கம்ப்யூட்டிங், ஆர்ட்டிபிசியல் இன்டெலிஜென்ஸ், ஐ.ஓ.டி., போன்ற நவீன தொழில்நுட்பங்களை பாடத்திட்டத்தில் இணைத்துள்ளோம்.
’காபி வித் வி.சி.,’
மாணவர்கள் யார் வேண்டுமானலும், முன் அனுமதியின்றி என்னை நேரில் வந்து சந்திக்கலாம். இதுதவிர, ஞாயிற்றுக் கிழமைகளில் ‘காபி வித் வி.சி.,’ எனும் பெயரில் பிரத்யேக நேரம் ஒதுக்கியும் மாணவர்களை சந்திக்கிறேன். இவ்வாறு, மாணவர்களுடன் மிக சகஜமாக கலந்துரையாடி, அவர்களது குறைகளையும், ஆலோசனைகளையும் மனம்திறந்து கேட்டு, அதற்கேட்ப மாற்றங்களை புகுத்துகிறேன். இதன்மூலம், மாணவர்கள் மிகவும் தன்னம்பிக்கையுடன் செயல்படுகின்றனர். இத்தகைய சுமூகமான செயல்பாடுகளின் மூலம், கல்வித் தரம் உயர்ந்திருப்பதை கண்கூடாக பார்க்க முடிகிறது.
மேலும், ஒவ்வொரு பாடப்பிரிவுடனும், துறை சார்ந்த திறன் வளர்ப்பு பயிற்சி அளிப்பதோடு மட்டுமல்லாமல், தேசிய, சர்வதேச சான்றிதழ்களையும் பெற்றுத்தருகிறோம். உதாரணமாக, ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் படிப்புடன், கமர்சியல் பைலட் உரிமத்திற்கான பயிற்சியையும் அளிக்கிறோம். பி.காம்., படிப்புடன் ஏ.சி.சி.ஏ., தகுதி சான்றுக்கு தயார்படுத்துகிறோம். வேலை வாய்ப்பிற்கான நேர்முகத்தேர்வில், இதுபோன்ற கூடுதல் தகுதி படைத்தவர்களுக்கே வேலை வாய்ப்பில் முன்னுரிமை கிடைக்கிறது. இவ்வாறு, சிறந்த நிறுவனங்களில், அதிக ஊதியத்தில் மாணவர்கள் வேலை பெறுவதால், பெற்றோர்கள் மகிழ்ச்சியடைகின்றனர்.
’இண்டஸ்ட்ரி’ அனுபவம் தேவை
இன்று, கல்வி நிறுவனத்திற்கான சர்வதேச 'ரேங்கிங்’ என்பது வணிகமயமாகிவிட்டது. தரவரிசையை வைத்து மட்டும் ஒரு கல்வி நிறுவனத்தை மதிப்பிட முடியாது. இந்திய மாணவர்கள் மிகவும் அறிவாளிகளாக இருந்தும், இந்திய கல்வி நிறுவனங்கள் பல தரமிக்கவையாக இருந்தும், சர்வதேச தரவரிசையில் இந்திய கல்வி நிறுவனங்கள் முக்கிய இடங்களை பிடிப்பதில்லை. இதற்கு, அதிக எண்ணிக்கையில், சர்வதேச மாணவர்கள் இந்தியாவிற்கு வந்து படிக்காததும், குறைவான ஆராய்ச்சி செயல்பாடுகளும் முக்கிய காரணம். ஆராய்ச்சிக்காக, அரசு ஏராளமான நிதியை ஐ.ஐ.டி., போன்ற அரசு கல்வி நிறுவனங்களுக்கு மட்டும் வழங்குகின்றன. என்றபோதிலும், அரசு கல்வி நிறுவனங்களும் ஆராய்ச்சியை விட, கற்பித்தலுக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கின்றன.
மேலும், ஐ.ஐ.டி., கல்வி நிறுவனங்களைப் போன்று கோடிக்கணக்கான நிதியை தனியார் கல்வி நிறுவனங்கள் பெறுவதில்லை. இந்த சூழலில் ஐ.ஐ.டி.,களுடன், தனியார் நிறுவனங்கள் ஒருபோதும் போட்டிபோட முடியாது. ஆனால், நாங்கள், பெற்றோர் மற்றும் மாணவர்களது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவே முனைகிறோம். தொழில்துறை சார்ந்த அனுபவத்தை பேராசிரியர்களுக்கு வழங்குகிறோம். தொழில் நிறுவனங்களுடன் தொடர்பும், அனுபவமும் இல்லாதவர்கள், வகுப்பறையில் சிறந்த பேராசிரியர்களாக இருக்க முடியாது!
-சாகுல் ஹமித் அபுபக்கர், துணைவேந்தர், பி.எஸ். அப்துர் ரகுமான் கிரசண்ட் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி, சென்னை.