காடுகளை பாதுகாக்கும் மன திருப்தி மட்டுமல்லாது சுற்றுச்சூழல் பாதுகாவலராக விளங்கும் திருப்தியை தருவது ஐ.எப்.எஸ்., பணி தான். இதை ஆண்டு தோறும் யு.பி.எஸ்.சி., நடத்துகிறது. சிறப்பான பதவி உயர்வுகளை இது உள்ளடக்கியுள்ளது. பயிற்சியின் பின் கோட்ட வன அதிகாரி, உதவி காடுகள் பாதுகாப்பாளர் போன்ற பணிகளில் நியமிக்கப்படுவர். இவர்களுக்குக் கீழ் பாரஸ்ட் கார்டுகள், பிளாக் ஆபிசர்ஸ், ரேஞ்ச் ஆபிசர்ஸ், அசிஸ்டண்ட் கன்சர்வேட்டர் ஆப் பாரஸ்ட்ஸ் பணி புரிவார்கள்.
வனச் சேவைத் தேர்வு பொதுவாக ஆண்டு தோறும் ஜூன் மாதம் நடத்தப்படுகிறது. இதற்கான விளம்பரம் பொதுவாக டிசம்பர்/ஜனவரியில் வெளியிடப்படுகிறது. 21 வயது முதல் 30 வயதுக்குள் இருப்பவர் விண்ணப்பிக்கலாம். இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம், புள்ளியியல், நிலவியல் இவற்றில் ஒன்றில் பி.எஸ்சி., தகுதி பெற்றிருப்பவர் விண்ணப்பிக்கலாம். விவசாய இன்ஜினியரிங் பட்டப்படிப்பு முடித்தவரும் விண்ணப்பிக்கலாம்.
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு நடத்தப்படுகிறது. 2 கட்டாயத் தாள்களும் 2 விருப்பத் தாள்களும் இதில் உண்டு. பொது அறிவும் ஆங்கிலமும் கட்டாயத் தாள்கள். மேலே தகுதியில் குறிப்பிட்டுள்ள பாடங்கள் தவிர காட்டியல், சிவில் இன்ஜினியரிங், மெக்கானிக்கல் இன்ஜினியரிங், கெமிக்கல் இன்ஜினியரிங் இவற்றில் 2 விருப்பப் பாடங்களை தேர்வு செய்து கொண்டு எழுதலாம்.