பாராமெடிக்கல் துறையில் வேலை வாய்ப்புகள் அதிகமுள்ளது என, எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழக விரிவுரையாளர் ஷைலஜா கூறினார்.
புதுச்சேரி முத்தியால்பேட்டை சுபலஷ்மி மகாலில், தினமலர் மற்றும் சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழகம் இணைந்து நடத்திய, வழிகாட்டி நிகழ்ச்சியில், "ஹெல்த் சயின்ஸ் படிப்புகளுக்கு ஏராளமான வாய்ப்புகள்" என்ற தலைப்பில் எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழக விரிவுரையாளர் ஷைலஜா பேசினார்.
அப்போது, மருத்துவத் துறையின் முதுகெலும்பாகத் திகழ்வது பாராமெடிக்கல் துறை. உலக சுகாதார நிறுவனம் குறிப்பிட்டுள்ள சதவீதத்தின்படி, இந்தியாவில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கேற்ப மருத்துவர்கள் மற்றும் மருத்துவ துறை சார்ந்தவர்களின் எண்ணிக்கை இல்லை. இதனால் இத் துறையில் வேலை வாய்ப்பு அதிகமுள்ளது.
நோய்களுக்கான புதிய மருந்துகளைக் கண்டுபிடித்து, அதைப் பரிசோதனைக்கு உட்படுத்தி மார்க்கெட்டுக்குக் கொண்டு வரும் "கிளினிக்கல் டிரையல்", பாதிக்கப்பட்ட உடலுறுப்புகள் பழைய நிலைக்குத் திரும்புவதற்கு அளிக்கப்படும் பிசியோதெரபி, உடல் மற்றும் மனதால் பாதிக்கப்பட்டவர்களைக் குணப்படுத்தும் ஆக்குபேஷனல் தெரபி, காது கேட்காத மற்றும் வாய் பேச முடியாதவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் ஆடியாலஜி மற்றும் ஸ்பீச் தெரபி, மெடிக்கல் லேப் டெக்னாலஜி, பார்மசி, நர்சிங் ஆகிய பிரிவுகளில் படிப்புகள் உள்ளன.
மேற்கண்ட படிப்புகளை முடிப்பவர்களுக்கு மருத்துவமனைகள், ஆய்வகங்கள், முதியோர் இல்லங்கள், மருத்துவக் கல்லூரிகள், ஜிம் மற்றும் பிட்னெஸ் சென்டர்கள், கவுன்சிலிங் மையங்கள், ஸ்போர்ட்ஸ் கிளப் ஆகியவற்றில் வேலை வாய்ப்புகள் அதிகமுள்ளன.
மேலும், அரசுத்துறையில் பணிபுரிய விரும்புவோர் "டிரக் இன்ஸ்பெக்டர்" பணியிலும் சேரலாம். இப்படிப்பை முடித்தவர்கள், சுய தொழிலிலும் ஈடுபடலாம்.இவ்வாறு ஷைலஜா பேசினார்.