எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் பாளைங்கோட்டை செயின்ட் இக்னேஷியஸ் கான்வென்ட் மாணவி ராம் அம்பிகை 496 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.
இவரது தந்தை ராம் கோபால் நெல்லை வானொலி நிலையத்தில் கிளார்க்காக உள்ளார். இவரது தாய் வெள்ளையம்மாள். தம்பி ராம்பாபு.
மாணவி ராம் அம்பிகை கூறுகையில், யு.கே.ஜி.,யில் இருந்து ஒரே பள்ளியில் படிக்கிறேன். வகுப்பு தேர்வுகளில் முதலிடம் பெறுவேன். மதிப்பெண் குறைகிறபோதும் பெற்றோர் திட்டுவதில்லை. டியூசன் போனதில்லை. இரவு தூக்கம் வரும்வரை படிப்பேன். அதிகாலையிலும் எழுந்து படிப்பேன்.
கடந்த 2 ஆண்டுகளாக வீட்டில் கேபிள் டிவி இல்லை. வீட்டு சுவர் முழுவதும் எனது படிப்பிற்குரிய சூத்திரங்கள், வரலாற்று ஆண்டுகளாக அட்டையில் எழுதி ஒட்டி எனது குடும்பமே இந்த வெற்றிக்கு உறுதுணையாக இருந்தது.
மொழிப்பாடங்களில் மதிப்பெண் குறைவதால்தான் மாநில ரேங்க் கிடைக்காமல் போய்விடும் என்பதால், மொழிப்பாடங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து படித்தேன். சாப்ட்வேர் இன்ஜினியராக வேண்டும் என்பதே எனது லட்சியம், என்றார்.