மாணவர்கள் தங்களுக்கென ஒரு இலக்கை நிர்ணயித்து கொள்ளவேண்டும். அந்த இலக்கை அடைவதற்கு கடின உழைப்பு, நேரம் தவறாமை, ஒத்திப்போடாமை ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும், என, பாவை கல்வி நிறுவன தலைவர் நடராஜன் பேசினார்.
ராசிபுரம் பாவை பாலிடெக்னிக் கல்லூரியில், முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா நடந்தது. கல்வி நிறுவன தலைவர் ஆடிட்டர் நடராஜன் தலைமை வகித்து பேசியதாவது: பாவையில், மாணவர்களுக்கு கடமையுணர்வு, கட்டுப்பாடு, ஒழுக்கத்துடன் கூடிய தரமான கல்வி வழங்கப்படுகிறது. முன்னேறு செல்லும் வழியில் தான் பின்னேறும் செல்லும். மாணவர்கள் தன் ரத்தத்தில் உற்சாகம், சக்தி, வேகம் கொண்டு திகழ்பவர்கள். அவர்களை நெறிப்படுத்துவதே எங்களின் கடமையாகும்.
இக்கல்வி நிறுவனம், ஐந்து முகம் கொண்ட குத்துவிளக்கு போன்றது, அதில், முதல் முகம் மாணவர்கள், இரண்டாம் முகம் ஆசிரியர்கள், மூன்றாம் முகம் பெற்றோர்கள், நான்காம் முகம் நிறுவனம் மற்றும் ஐந்தாம் முகம் சமுதாயமாகும். ஆசிரியர்கள் தங்களையே போதிப்பவர்கள், அவர்கள் கற்ற கல்வியை மட்டுமின்றி, பண்பாடு, கலாச்சாரம், ஒழுக்கம், தனிப்பட்ட குணம் ஆகியவற்றைக் கொண்டு மாணவர்களுக்கு எடுத்துக்காட்டாக திகழ்பவர்கள்.
மாணவர்கள் தங்களுக்கென ஒரு இலக்கை நிர்ணயித்துக்கொள்ள வேண்டும். அந்த இலக்கை அடைவதற்கு கடின உழைப்பு, நேரம் தவறாமை, ஒத்திப்போடாமை ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும். பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளுக்கு சிறந்த எடுத்துக்காட்டாகவும், ஊக்குவிப்பாளராகவும் விளங்க வேண்டும். பெற்றோர்களாகிய நீங்கள் செய்யவேண்டியது, ஊடகங்களைத் தவிர்த்து மாணவர்கள் தங்கள் இலக்கை அடைய ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.