‘வேலையின்மை இருக்கவேகூடாது’ | Kalvimalar - News

‘வேலையின்மை இருக்கவேகூடாது’

எழுத்தின் அளவு :

பிரதியுஷா கல்லூரியின் கல்வி ஆலோசகர் வாசு அளித்த பேட்டி:

இந்தியாவின் கல்வித் தேவையை அரசு கல்வி நிறுவனங்களால் மட்டும் பூர்த்தி செய்துவிட முடியாது. இந்திய கல்வித் தரத்தை உலகளவில் எடுத்துச் செல்வதில் தனியார் கல்வி நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. தனியார் கல்வி நிறுவனங்கள் இல்லை என்றால் இந்தியாவில் கல்வி கேள்விக்குறிதான்.

தொழிற்நுட்பக் கல்வியில் ஐ.ஐ.டி., கல்வி நிறுவனங்களுக்கு இணையான கல்வித் தரத்தில் பல்வேறு தனியார் கல்வி நிறுவனங்கள் வழங்குகின்றன. ஐ.ஐ.டி., மாணவர்கள் ஒவ்வொரு இந்தியரின் வரிப் பணத்தில் படித்துவிட்டு, வெளிநாடுகளுக்கு சென்று வேலை பார்ப்பது என்ன நியாயம்? அரசும் அவர்களுக்கு உரிய வாய்ப்புகளை இங்கேயே வழங்க வேண்டும்.

இந்தியாவில் தற்போதைய தேவைக்கு ஏற்ப மருத்துவர்களின் எண்ணிக்கை இல்லை. அதற்காக, மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்த்த திட்டமிட்டாலும், அதற்கேற்ப மருத்துவத் துறை பேராசிரியர்கள் நம்மிடையே இல்லை. எனவே, படிப்படியாக உயர்ந்த தரத்தில் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். 

தொழில் நிறுவனங்கள் எதிர்பார்க்கும் அளவில் உரிய வேலைவாய்ப்புத் திறனை பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் வழங்குவதில்லை. அதனால்தான் தொழில் நிறுவனங்கள்,  பட்டதாரிகளை வேலைக்கு எடுத்தும் ஆறு மாத கால பயிற்சியை வழங்க வேண்டியுள்ளது. எனவே, தொழில் நிறுவனங்கள் எதிர்பார்க்கும் திறனை கல்லூரிப் பாடத்திட்டத்திலேயே இணைக்க வேண்டும். பாடத்திட்டங்களை மாற்றி நடைமுறைப் பயிற்சியுடன் அதிக ‘சான்ட்விச்’ படிப்புகள் வழங்கப்பட வேண்டும்.

வேலையின்மையை போக்க வேண்டியது அரசின் தலையாய கடமை. வேலையின்மை பல்வேறு சமூக சீர்கேடுகளுக்கு வழிவகுத்துவிடும். எனவே, கல்வி பெறுவர்கள் அனைவருக்கும் தகுந்த வேலை கிடைக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் நடைமுறைப்படுத்த வேண்டும். வேலையில்லாத நிலை மட்டும் நாட்டில் இருக்கவேகூடாது.

அதிகளவில் தொழில்முனைவோர் உருவாக்கப்பட வேண்டியதும் அவசியம். தொழில்முனைவோராக உரிய பயிற்சியும், ஊக்கமும் அளிக்கப்படவேண்டும். அரசாங்கம் விரிந்த கண்ணோட்டத்தில் சிந்திக்க வேண்டும்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us