நாட்டின் பொருளாதாரத்தை மிகவும் பாதிக்கும் தன்மை உற்பத்தி துறைக்கு உண்டு. ஏனெனில், உற்பத்தி திறனைப் பொருத்தே அந்நாட்டின் பொருளாதாரம் இருக்கும்.
இன்று நாம் பயன்படுத்தும் மொபைல், கம்ப்யூட்டர் உட்பட அனைத்து எலக்ட்ரானிக் பொருட்களுக்கான, தொழில்நுட்ப வடிவமைப்புகளும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவை. இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்ட மற்றும் உருவாக்கப்பட்ட தொழில்நுட்பம் மிகவும் குறைவு. இந்த இரண்டு முக்கிய தன்மைகளும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முட்டுக்கட்டைகளாக உள்ளன.
சிறப்பு கல்வி நிறுவனம்
இந்த நிலையை போக்கும் வகையில், கடந்த 2007ல் மத்திய அரசு, இந்திய தகவல் தொழில்நுட்பம், வடிவமைப்பு மற்றும் உற்பத்திக்கான இரண்டு சிறப்பு கல்வி நிறுவனங்களை நிறுவியது. அதில் ஒன்று தமிழகத்திலும், மற்றொன்று மத்தியப் பிரதேசத்திலும் அமைக்கப்பட்டுள்ளது.
ஐ.ஐ.டி., என்.ஐ.டி.,களைப் போல், மத்திய அரசின் நிதி உதவியுடன் செயல்படுவதால், நிர்வாக அமைப்பு ஒரே மாதிரியாக உள்ளது. எனினும், பாடத்திட்ட முறையில் மாறுபட்டது. இக்கல்வி நிறுவனம் வடிவமைப்பு மற்றும் உற்பத்தி துறைகளில் நிபுணத்துவம் அளிக்கும் பிரதான நோக்கில் உருவாக்கப்பட்டது.
ஐ.ஐ.டி., மற்றும் என்.ஐ.டி.,கள் அடிப்படை பண்புகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கின்றன. அடிப்படைகளையும் கடந்து, இன்றைய தேவைகளுக்கு ஏற்ப, நடைமுறை சார்ந்த பண்புகளையும் இணைத்து வழங்குகிறது IIITD&M.
பாடத்திட்டம்
தொழில் துறைக்கு தேவையான வகையில் பாடத்திட்டத்தை வழங்குவது இக்கல்விநிறுவனத்தின் முக்கிய நோக்கம். அதற்கேட்ப, பாடத்திட்டத்தை உருவாக்குவது முதல் ஆய்வகங்களை அமைப்பது உட்பட பெரும்பாலான செயல்பாடுகள், தொழில் நிறுவனங்களுடன் இணைந்து மேற்கொள்ளப்படுகின்றன.
இளநிலை, முதுநிலை, ஆராய்ச்சி ஆகிய நிலைகளில் பல்வேறு படிப்புகள் வழங்கப்படுகின்றன. பாடத்திட்டங்கள் பல்வேறு நிலைஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டு, புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. நவீன உள்கட்டமைப்பு வசதிகளுடன் இக்கல்வி நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது.
இடம் கிடைக்குமா?
‘மெரிட்’ அடிப்படையிலேயே அனைத்து பாடப்பிரிவுகளுக்குமான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இளநிலைப் பாடப்பிரிவுகளைப் பொருத்தவரை, பிளஸ் 2 மற்றும் ஜே.இ.இ., மதிப்பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
வெளிநாட்டு கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில் துறை நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, ஜப்பான், ஐரோப்பிய நாடுகளில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கும், தொழில் நிறுவனங்களுக்கும் மாணவர்கள் சென்று செயல்முறை அனுபவத்தை பெறுகின்றனர்.
-ஞானமூர்த்தி, இயக்குனர், இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் இன்பர்மேஷன் டெக்னாலஜி, டிசைன அன்ட் மேனுபாக்சரிங், காஞ்சிபுரம்.