"எங்கள் வீட்டில் டிவி இல்லாததால், மாநில அளவில் முதலிடம் பெற்றேன்,' என, எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில், தமிழ்ப் பாடத்தில் மாநில அளவில் முதலிடம் பெற்ற, ஈரோடு மாணவன் சிபி சக்கரவர்த்தி கூறினார்.
ஈரோடு இந்து கல்வி நிலையம் பள்ளி மாணவன் சிபி சக்கரவர்த்தி, எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில், தமிழில் 100 மார்க் எடுத்து, மாநில அளவில் முதலிடம் பெற்றார். பாட வாரியாக மதிப்பெண் விவரம்: தமிழ் - 100, ஆங்கிலம் - 87, கணிதம் - 100. அறிவியல் - 100, சமூக அறிவியல் - 100, மொத்தம் - 487. இவரது தந்தை ரங்கசாமி, ஈரோடு ரயில்வே காலனி பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார். அம்மா சித்ரா, ஈரோடு வீரப்பன்சத்திரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக உள்ளார்.
மாணவன் சிபி சக்கரவர்த்தி கூறியதாவது: தமிழில் எழுத்துப் பிழையில்லாமல் எவ்வாறு எழுதுவது என்பதை, ஆசிரியை மகேஸ்வரி கற்றுக் கொடுத்தார். அதிகமாக கதைப் புத்தகம் படிப்பது, பாடல்கள் பாடுவது மட்டுமே என் பொழுதுபோக்கு. எங்கள் வீட்டில், டிவி கிடையாது. தினமும் அதிகாலை, 5 மணிக்கு படிக்கத் துவங்குவேன். தமிழில் அதிக மார்க் எடுக்க, தமிழ் பாடப் புத்தகத்தை மட்டுமே முழுக்க படித்தேன். கைடு மற்றும் மாதிரி வினா புத்தகங்கள் எதையும் நான் படிக்கவில்லை. சமச்சீர் கல்வி பாடம் மிகவும் எளிதாக இருந்தது. புத்தகத்தை வரி விடாமல் படித்ததால், மாற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு கூட பதில் அளிக்க முடிந்தது, என்றார்.