காஞ்சிபுரம் மாமல்லன் நகர் ஒட்டக்கூத்தர் தெருவை சேர்ந்தவர் வேல்முருகன். எம்.ஆர்.எப்., நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவரது மனைவி காமாட்சி. இவர்களின் மூத்த மகள் ராஜேஸ்வரி. மாமல்லன் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்தார். இரண்டாவது மகள் ஸ்ரீலதா, அதே பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கிறார்.
வெளியிடப்பட்ட 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளில், மாணவி ராஜேஸ்வரி 500க்கு 495 மதிப்பெண்கள் எடுத்து, மாநில அளவில் மூன்றாமிடம் பிடித்துள்ளார். இவர் தமிழில் 97, ஆங்கிலத்தில் 98, கணிதத்தில் 100, அறிவியலில் 100, சமூக அறிவியலில் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
இது குறித்து ராஜேஸ்வரி கூறியதாவது: நான் முதல் வகுப்பிலிருந்தே வகுப்பில் முதல் மதிப்பெண் எடுத்து வந்தேன். ஆசிரியர் நடத்தும் பாடங்களை, அன்றே படித்து விடுவேன். பெரும்பாலும் இரவு படிப்பேன். மாலை 6 மணிக்கு துவங்கி, தூக்கம் வரும் வரை படிப்பேன். பத்தாம் வகுப்பிற்கென சிரத்தை எதுவும் எடுக்கவில்லை. பள்ளியிலேயே சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டன. வகுப்பாசிரியர்கள் "நீ மாநில அளவில் சிறப்பிடம் பெறுவாய்" என அடிக்கடி கூறி வந்தனர். ஓய்வுபெற்ற பள்ளித் தலைமை ஆசிரியரான, எனது தாத்தா வேலாயுதம், அதிக ஊக்கம் அளித்தார். கணிதம், அறிவியல், சமூக அறிவியல், ஆகியவற்றில் அதிக மதிப்பெண்கள் எடுப்பேன் என, எதிர்பார்த்தேன்.
மொழிப்பாடங்களில் மதிப்பெண் குறையும் என, நினைத்தேன். ஆனால் அதிலும் அதிக மதிப்பெண்கள் வந்ததால், மாநில அளவில் மூன்றாமிடத்தை பிடிக்க முடிந்தது. இதை நான் எதிர்பார்க்கவில்லை. தற்போது மகிழ்ச்சியாக உள்ளது. அடுத்து உயிரியல் பாடப்பிரிவில் சேர்ந்து, மருத்துவராக ஆசைப்படுகிறேன். மேஜைப்பந்து விளையாட்டில், மாநில அளவிலானப் போட்டிகளில் பங்கேற்றுள்ளேன். ஒன்பதாம் வகுப்பு வரை விளையாட்டை தொடர்ந்தேன். பத்தாம் வகுப்பு வந்ததும் விளையாட செல்லவில்லை. அடுத்து, படிப்புடன் விளையாட்டையும் தொடர உள்ளேன். பாடங்களை புரிந்து படித்தது, அதிக மதிப்பெண்கள் எடுக்க உதவியாக இருந்தது. இவ்வாறு ராஜேஸ்வரி தெரிவித்தார்.