தொல்லியல் நிறுவனம் | Kalvimalar - News

தொல்லியல் நிறுவனம்டிசம்பர் 08,2021,20:01 IST

எழுத்தின் அளவு :

தமிழகத்தின் தொல்லியல் சிறப்புகளை உலகறியச் செய்யவும், ஆய்வு மேற்கொள்ளவும், தொடர்ந்து பாதுகாக்கவும் கடந்த 1961ம் ஆண்டில் தொல்லியல் துறையை தமிழக அரசு துவக்கியது.



முக்கியத்துவம்: தமிழக தொல்லியல் துறையால் 1974ம் ஆண்டு முதல் ஒர் ஆண்டு கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் முதுநிலை டிப்ளமா படிப்பு வழங்கப்பட்டு வந்தது. தற்போது, தொல்லியல் குறித்தான ஆர்வம் புத்தாக்கம் பெற்றுள்ள நிலையில், ’தொல்லியல் நிறுவனம்’ எனப்  பெயர் மாற்றம்  செய்யப்பட்டு, இரண்டு ஆண்டு கால முதுநிலை டிப்ளமா படிப்பாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.



பல்கலைக்கழக மானியக் குழு வகுத்துள்ள பாடத்திட்டங்களுக்கு இணையாக, இந்த முதுநிலை டிப்ளமா படிப்பின் பாடத்திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. தொல்லியல் வல்லுநர்களைக் கொண்டு செய்முறைப்பயிற்சியுடன் கற்பிக்கப்படுகிறது. நாட்டின் புகழ்பெற்ற நிறுவனங்களுடன் இணைந்து தரமான கல்வியை வழங்குவதை இந்நிறுவனம் நோக்கமாக கொண்டுள்ளது.



படிப்பு: கல்வெட்டியலில் முதுநிலை பட்டயப் படிப்பு



பயிற்சிக் காலம்:  2 ஆண்டுகள் 



பயிற்று மொழிகள்: தமிழ் மற்றும் ஆங்கிலம்



கல்வித் தகுதி: தகுதியான முதுநிலை பட்டப்படிப்பில் குறைந்தது 55 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 



சேர்க்கை முறை: எழுத்து மற்றும் நேர்முக தேர்வு அடிப்படையில் தகுதியான மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர்.



உதவித்தொகை: ஒவ்வொரு மாணவருக்கும் மாதம் 5 ஆயிரம் ரூபாய் உதவித் தொகையாக வழங்கப்படுகிறது. 



பயிற்றுவிக்கப்படும் பாடங்கள்: தொல்லியல் ஓர் அறிமுகம், தொல்லியல் கோட்பாடுகளும், முறைமைகளும், தொன்மைக் கால வரலாற்றுத் தொல்லியல், இந்திய அரசியல் வரலாறு, வரலாற்றியலும் ஆய்வு நெறிமுறைகளும், இந்திய கல்வெட்டியலும் தொல் எழுத்தியலும், வட இந்தியக் கட்டடக்கலை, தென்னிந்தியக் கட்டடக்கலை, இந்திய நாணயவியலும் அருங்காட்சியகவியலும், மரபு சார் மேலாண்மை மற்றும் பாதுகாத்தல், இந்திய தொல்லியல் சட்டங்கள், பண்டைய இந்திய சமூகமும், பொருளாதாரமும், இந்திய சிற்பக்கலை, தமிழக அரசியல் வரலாறு, கடல் சார் தொல்லியல், பண்டைய அறிவியலும் தொழில்நுட்பமும் உட்பட பல பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன.



கள ஆய்வு: தொல்லியல் கள ஆய்வுகளும் அகழாய்வுகளும், கல்வெட்டியலும் மற்றும் நாணயவியலும், தொல்லியல் பாதுகாப்பு, தொல்பொருட்களை ஆவணப்படுத்துதலும் காட்சிப்படுத்துதலும், விழிப்புணர்வு தொல்லியல், மின்னணுத் தொல்லியல் எனப் பல்வேறு தளங்களில் களப் பயிற்சி வழங்கப்படும்.



முனைவர் பட்ட ஆய்வு மையம்: சென்னைப் பல்கலைக்கழகத்தின் ஒப்புதலுடன், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை 2003ம் ஆண்டு முதல் அங்கீகாரம் பெற்ற முனைவர் பட்ட ஆய்வு மையமாக செயல்பட்டு வருகிறது. கல்வெட்டியல், தொல்லியல், காசியல், கட்டடக்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை, இலக்கியம் மற்றும் வரலாறு ஆகிய துறைகளில் ஆராய்ச்சி பணிகள் மேற்கொள்ள வசதியாக 13,300க்கும் மேற்பட்ட புத்தகங்களுடன் நூலகம் உள்ளது.



விபரங்களுக்கு: www.tnarch.gov.in



Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us