கோவை அவிநாசிலிங்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி சாய் ரவீணா, சத்துணவியல் பாடப் பிரிவில் மாநில அளவில் மூன்றாம் இடத்தைப் பிடித்து பள்ளிக்கும் பெற்றோருக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
இதுகுறித்து மாணவி கூறியதாவது, "மற்ற பாடங்களை விட சத்துணவியலில் அதிக மார்க் எடுக்க வேண்டும் எனும் ஆர்வத்தில் படித்தேன். 193 மார்க் எடுத்து, மாநிலத்தில் மூன்றாம் இடம் பிடித்தது மிகவும் சந்தோஷம். பாடங்களை மனப்பாடம் செய்யாமல், புரிந்து படித்தேன்.
தமிழ் 162, ஆங்கிலம் 174, இயற்பியல் 157, வேதியியல் 168, சத்துணவியல் 193 என மொத்தம் 1007 மார்க் கிடைத்துள்ளது. அப்பா ராஜசேகர், அம்மா சரஸ்வதி விவசாயம் பார்த்துதான் படிக்க வைத்தனர். பள்ளி விடுதியில் தங்கி படித்ததால், முழுமையாக படிப்பில் கவனம் செலுத்த முடிந்தது.
அதிகாலை 4.00 மணி முதல் 7.00 மணி வரையும், மாலை 7.00 மணி முதல் இரவு 10.00 மணி வரையும் கவனமாக படித்தேன். டியூஷனுக்கு செல்லவில்லை. பள்ளி ஆசிரியர்கள் கொடுத்த பயிற்சியின் படி படித்தேன். மேற்படிப்பில் "பி.பார்ம்" படிக்க ஆசை." என்றார்.