கோவை அவினாசிலிங்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி அனுசூர்யா, மனையியல் பாடப்பிரிவில் மாநிலத்தில் முதல் இடம் பிடித்துள்ளார்.
அனுசூர்யா கூறியதாவது: "ஒரு வித்தியாசத்துக்காக மனையியல் பிரிவை எடுத்தேன். ஆசிரியர் மாநிலத்தில் முதல் இடம் எடுக்க வேண்டும் என அடிக்கடி உற்சாகப்படுத்தி கொண்டே இருப்பார். அதனால் தினமும் முழுக்கவனமுடன் இரண்டு மணிநேரம் படிப்பேன்.
இத்தேர்வில் தமிழ் 186, ஆங்கிலம் 168, இயற்பியல் 153, வேதியியல் 173, கணிதம் 192, மனையியல் 197 என மொத்தம் 1069 மதிப்பெண்கள் பெற்றுள்ளேன்.
ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் நண்பர்கள் கொடுத்த உற்சாகமே, மாநிலத்தில் முதல் இடம் எடுக்க வைத்துள்ளது. அனைவருக்கும் நன்றி.
அப்பா குமாரவேல், அம்மா மரகதம் விவசாயம் செய்து என்னை படிக்க வைத்தனர். இப்போது என்னைவிட, பெற்றோர் மிகவும் சந்தோஷமாக உள்ளனர். மேற்படிப்பில் கணிதம் எடுத்து படித்து, ஆசிரியையாக வரவேண்டும் என்பதே என்னுடைய லட்சியம்." இவ்வாறு, அனுசூர்யா கூறினார்.