இன்ஜினியரிங் படிப்பு குறித்த போலியான பிம்பம் தகர்த்தெறியப்பட்டு, என்றும் வாய்ப்புகளை அள்ளித்தரும் துறை என்ற உண்மையை நிலையை அனைத்து தரப்பினரும் உணரத்தொடங்கியுள்ளனர். அதிகமான மாணவர்கள் இன்ஜினியரிங் துறையை தேர்வு செய்வதும், ஆன்லைன் இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் பங்கேற்பதற்காக ஏராளமான விண்ணப்பங்கள் பெறப்பட்டிருப்பதும் அதன்வெளிப்பாடே!
சிறந்த வேலை வாய்ப்பை பெறுவதை நோக்கமாகக் கொண்டே பெரும்பான்மையான மாணவ, மாணவிகள் இன்று கல்விநிறுவனங்களில் சேர்க்கை பெறுகின்றனர். அதில் தவறேதும் இல்லை. தன்னம்பிக்கை பெற்ற சிறந்த மனிதர்களாக சமுதாயத்தில் செயலாற்ற வைப்பதே கல்வியின் பிரதான நோக்கம். அத்தகைய நோக்கத்தை நிறைவேற்றுவதே எங்கள் கல்வி நிறுவனங்களின் செயல்பாடாக உள்ளது. அத்தகைய செயல்பாட்டை தீவிரமாக நிறைவேற்றுகையில், சிறந்த வேலைவாய்ப்புகளையும், புத்தாக்க சிந்தனை மிக்க தொழில்முனைவோர் திறன்களையும் மாணவர்கள் எளிதாக பெறுகின்றனர்.
புதிய கண்டுபிடிப்புகள்
நான்கு ஆண்டுகள் கொண்ட இன்ஜினியரிங் படிப்பில், ஐடியத்தான், சால்வத்தான், இன்னோவத்தான், இன்ஸ்பெரத்தான் என ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு திட்டத்தை எங்களது மாணவர்களுக்கு வழங்குகிறோம். இதன்படி, இறுதியாண்டில் மட்டுமே புராஜெக்ட் செய்யாமல், ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நிலைகளில் செயல்பட்டு, இறுதியாண்டில் ஒரு புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தவும், தொழில்முனைவோராகவும் வளம்வர மாணவர்களை ஊக்குவிக்கிறோம். இவற்றின் வாயிலாக, சமூக பிரச்னைகளை அடையாளம் கண்டு, அவற்றில் புராஜெக்ட் செய்து, பிரச்னைகளுக்கு உரிய தீர்வு காண மாணவர்கள் முயற்சிக்கின்றனர். அறிவை தேடிப்பெறுவதிலும், புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்துவதிலும் பேராசிரியர்களும், மாணவர்களும் இணைந்து செயல்பட வேண்டும்.
திட்டங்களை பயன்படுத்துங்கள்
இன்றைய டிஜிட்டல் உலகில் எந்த மூலையில் இருக்கும் நிபுணர்களிடமும் எளிதாக தொடர்புகொண்டு கலந்துரையாடவும், கருத்துக்களை பரிமாறவும், திறன்களை வளர்த்துக்கொள்ளவும் முடிகிறது. முன்பு எப்போதையும் விட, சமீப காலமாக புதிய கண்டுபிடிப்புகளுக்கு நம் நாட்டில் பெரிய உந்துதல் ஏற்பட்டுள்ளது. அட்வான்ஸ்டு மேனுபாக்சரிங் சென்டர், அடல் இன்னோவேஷன் மிஷன், அடல் டிங்கரிங் லேப், ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான், தமிழ்நாடு ஸ்டார்ட்-அப் அண்டு இன்னோவேஷன் மிஷன் போன்ற பல்வேறு முயற்சிகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு, புதிய திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றன. ஐ.இ.இ.இ., என்.பி.டி.இ.எல்., ஜல்சக்தி, கிளின் எனர்ஜி போன்ற திட்டங்களையும் மாணவர்கள் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இன்ஜினியரிங் படிப்போடு, இதர திறன்களை வளர்த்துக்கொள்வதும் ஒவ்வொரு மாணவருக்கும் மிகவும் அவசியமாகிறது.
அனைத்து துறைகளிலும் இன்று ஏராளமான வாய்ப்புகள் குவிந்துகிடக்கின்றன. இத்தகைய சூழலில், வாய்ப்புகள் இல்லை என்று சொல்பவர்கள், அவற்றை சரியாக புரிந்துகொள்ளவில்லை என்றே அர்த்தம். வாய்ப்புகளை சரியாக தேடி செல்பவர்களுக்கு வானமே எல்லை.
-சாய்பிரகாஷ் லியோமுத்து, சி.இ.ஓ., சாய்ராம் கல்வி நிறுவனங்கள், சென்னை.