இந்தியாவில் தொழில்நுட்ப வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கில், ‘மேக் இன் இந்தியா, ஸ்கில் இந்தியா மற்றும் டிஜிட்டல் இந்தியா’ போன்ற திட்டங்கள் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
தொழில்முனைவோர் பயிற்சி
ட்ரோன் தயாரிப்பு, வாகனங்கள் கண்டுபிடிப்பு, சாப்ட்வோர் மற்றும் ஆட்டோமேஷன், செயற்கை நுண்ணறிவு பயன்பாடு போன்றவற்றில், தேசிய, சர்வதேச அளவில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்க தங்களது மாணவர்களை ஒவ்வொரு கல்வி நிறுவனமும் ஊக்கப்படுத்த வேண்டும். வேலை வாய்ப்பை பெற்றுத்தருவதோடு மட்டுமல்லாமல், புதிய கண்டுபிடிப்புகள் வழியே, மாணவர்களை தொழில் முனைவோராகவும் உருவாக்க வேண்டும்.
அதன்படி, எங்கள் மாணவர்களுக்கு இன்டெர்ன்ஷிப் பயிற்சிகள் வழங்கவும், மாணவர்களை தொழில் முனைவோராக மாற்றுவதற்கான சாத்தியங்களை ஏற்படுத்தவும், தொழிற்துறையினருடன் இணைந்து செயல்படுகிறோம். கல்லுாரி வளாகத்தில், மேம்பட்ட அதிநவீன தொழில்நுட்பங்களை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கார்ப்ரேட் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவது குறித்தும் திட்டமிட்டுள்ளோம்.
அமேசானில் மட்டும் 124 கண்டுபிடிப்புகளை எங்கள் மாணவர்கள் விற்பனைக்கு வைத்துள்ளனர். ஒரு மாணவர், குஜராத்தில் நடைபெற்ற மத்திய அரசின் திட்டம் குறித்த போட்டியில் பங்கேற்று, தேசிய அளவில் முதல் பரிசை பெற்றார். இதுபோன்று, பல்வேறு போட்டிகளில் மாணவர்கள் பங்கேற்று, கண்டுபிடிப்பாளர்களாகவும், தொழில் முனைவோராகவும் உருவாகின்றனர். அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குகிறோம்.
நம்பிக்கை
தொழில்நுட்ப கற்பித்தல், திறன் வளர்ப்பு திட்டங்கள் ஆகியவற்றின் மீது மாணவர்களுக்கு சிறந்த நம்பிக்கை ஏற்படும் வகையில் கல்வி நிறுவனங்கள் செயல்பட வேண்டும். இங்கு படித்தால், தொழில்நுட்பத்தை சிறப்பாக கற்று கொள்வதுடன், நிச்சயமாக நல்ல சம்பளத்துடன் பெரிய நிறுவனங்களில் வேலைக்கு சேரலாம் என்ற எண்ணத்தையும் மாணவர்களிடம் ஏற்படுத்த வேண்டும். படித்து முடித்ததும், முதலில் வேலைவாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவதோடு, படிப்படியாக தொழில் முனைவோராக மாற வேண்டும் வகையில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்.
அதன்படி, கோவை கொடிசியாவுடன் இணைந்து எங்கள் கல்வி நிறுவனம் செயல்படுகிறது. மதுரை, சென்னை, ஈரோடு, திருப்பூர் போன்ற மாவட்டங்களில் உள்ள தொழில்துறையினரும், வணிகரீதியிலான பெரிய தொழில் நிறுவனங்கள், அவை சார்ந்த கூட்டமைப்புகள் ஆகியவற்றுடன் இணைந்து செயல்படவும் முயற்சி மேற்கொண்டுள்ளோம்.
-எஸ்.வி.பாலசுப்ரமணியம், தலைவர், பண்ணாரி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, சத்தியமங்கலம், ஈரோடு.