உடலையும், மனதையும் இணைக்கும் ஒரு கருவியே யோகப் பயிற்சி. மனதை ஒருமுகப்படுத்தி, மன அழுத்தத்தை குறைக்க இப்பயிற்சி மிகவும் உதவுகிறது. யோகா குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வரும் சூழலில், அது சார்ந்த படிப்புகள் பிரபலமடைந்து வருகின்றன.
முக்கியத்துவம்
மனதை நேர்வழிப்படுத்தும் செயல் என்றும் வாழ்க்கை அறிவியலை அடிப்படையாகக் கொண்ட வாழும் கலை என்றும் யோகா அறியப்படுகிறது. பதஞ்சலி முனிவரால் இக்கலை இந்தியாவில் தோற்றுவிக்கப்பட்டு, தற்போது உலகம் முழுவதும் ஆதரிக்கக் கூடிய ஒரு ஒழுக்க நெறியாக உள்ளது. மேலும், நம் நாட்டில் யோகா ஒரு பிரத்யேக மருத்துவ படிப்பாகவும் மாணவர்களால் விரும்பி படிக்கப்படுகிறது.
2028ம் ஆண்டிற்குள் இயற்கை மருத்துவர்களுக்கான தேவை 7 சதவீத வளர்ச்சியை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆங்கில மருத்துவம் அல்லாத பிற மருத்துவத்தில் மக்களின் ஈடுபாடு 2030க்குள் 25.1 சதவீதம் வளர்ச்சியடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இளநிலை மருத்துவ படிப்பு: பேச்சுலர் ஆப் நேச்சுரோபதி அண்டு யோஜிக் சயின்சஸ் - பி.என்.ஒய்.எஸ்.,
படிப்பு காலம்: ஓர் ஆண்டு செயல்முறை பயிற்சியுடன் மொத்தம் ஐந்தரை ஆண்டுகள்.
தகுதிகள்: 12ம் வகுப்பு அறிவியல் பாடத்தில் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய பாடங்களை முக்கியப் பாடங்களாகக் கொண்டு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பாடத்திட்டம்: உயிர்வேதியியல், மனித நுண்ணுயிரியல், அடிப்படை மருந்தியல், மனித உடல்கூறியல், சமூக மருத்துவம், மருத்துவமனை நிர்வாகம், நோயியல், யோகா சிகிச்சை, மனித உடலியல், மகளிர் மற்றும் மகப்பேறியல்.
இதர படிப்புகள்: இளநிலை முடித்த மாணவர்கள் எம்.டி., - யோகா அண்டு நேச்சுரோபதி முதுநிலை படிப்பை தொடரலாம். தொடர்ந்து, யோகாவில் எம்.எஸ்சி., எம்.பில்., பிஎச்.டி., ஆகிய படிப்புகளையும் மேற்கொள்ளலாம். மூலிகை மருத்துவத்தில் அட்வான்ஸ்டு சான்றிதழ் படிப்பு, யோகா சிகிச்சையில் அட்வான்ஸ்டு சான்றிதழ் படிப்பு உட்பட பல்வேறு குறுகிய கால படிப்புகளும் வழங்கப்படுகின்றன. ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்பை நிறைவு செய்தவர்கள் எம்.எஸ்சி., -யோகா படிப்பில் சேரலாம்.
வேலை வாய்ப்பு
இயற்கை மருத்துவர், யோகா சிகிச்சையாளர், ஆராய்ச்சி உதவியாளர், பேராசிரியர், மருத்துவ உதவியாளர், இயற்கை மருத்துவ ஆலோசகர் ஆகிய பணி வாய்ப்புகளை பெறலாம். சுகாதாரப் பாதுகாப்பு துறைக்கான ஆராய்ச்சி மையங்கள், தேசிய நிறுவனங்கள், மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்களில் அரசு பணியை பெறலாம். சுய வேலை வாய்ப்பும் பிரகாசமாக உள்ளது.