தற்போது 10ம் வகுப்பில் படிக்கும் எனது மகனை எந்தப் படிப்பில் சேர்த்தால் அவனுக்குச் சிறப்பான எதிர்காலம் அமையும் என தெரியவில்லை. விளக்கவும். | Kalvimalar - News

தற்போது 10ம் வகுப்பில் படிக்கும் எனது மகனை எந்தப் படிப்பில் சேர்த்தால் அவனுக்குச் சிறப்பான எதிர்காலம் அமையும் என தெரியவில்லை. விளக்கவும். ஜூலை 26,2008,00:00 IST

எழுத்தின் அளவு :

என்ன படிக்க விரும்புகிறாய் என அவனிடம் உங்களது வீட்டிற்கு வருபவர் யாராவது ஒருவர் கேட்டால் அவன் என்ன கூறுகிறான்? டாக்டர், இன்ஜினியர், பைலட், ஆசிரியர் இப்படி ஒன்றைத் தானே கூறுகிறான்? அல்லது நீங்களோ உங்களது கணவரோ பார்க்கும் வேலைக்குப் போக விரும்புவதாகக் கூறலாம் அல்லவா? சில ஆண்டுகளுக்கு முன்பு வரை அரசுத்துறையில் வேலை பெறுவதே பலரின் கனவாக இருந்தது.

ஆனால் இப்போது இந்த நிலை மாறியிருக்கிறது. இன்று எண்ணற்ற புதிய வாய்ப்புகள் தினமும் உருவாகின்றன. இது வரை ஏற்றுக் கொள்ளப்படாத துறைகளெல்லாம் இன்று நமது இளைஞர்களின் வாழ்வாதாரம் தரும் துறைகளாக கருதப்படுவதைக் காண்கிறோம்.

தங்களது பலம் மற்றும் பலவீனங்களின் அடிப்படையில் நமது மாணவர்கள் இன்டர்நெட் போன்ற நவீன தொழில் நுட்பத்தின் உதவியோடு தங்களுடைய துறையை அவர்களே தேர்வு செய்து கொள்கிறார்கள். தேர்வுகளில் பெறும் மதிப்பெண்களை விட திறன்களே இன்று எதிர்காலத்தைத் தீர்மானிப்பதாக மாறியுள்ளது.

இதனால் தான் ஆண்டாண்டு காலமாக இருந்து வந்த படிப்புகளிலிருந்து விலகி புதுப் படிப்புகளை மாணவர்கள் நாடுகிறார்கள். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் அவர்களது பெற்றோரும் இதில் அவர்களுக்கு ஆதரவாக இருப்பதுதான்.

இதனால் தான் இன்று வேகமாக வளரும் துறைகளான ஏவியேஷன், உணவுத் துறை, பதிப்பித்தல், அனிமேஷன், இசை, ஓட்டல் மற்றும் கேட்டரிங் போன்ற துறைகளில் பல மாணவர்கள் ஆர்வத்தோடு சேருகிறார்கள். எனவே உங்களது பையனின் அடிப்படை ஆர்வம் மற்றும் திறன்களை மனதில் கொண்டு நன்கு அலசி ஆராய்ந்து அவனுக்கான துறையை அவனது முடிவோடு தீர்மானியுங்கள்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us