அங்கீகாரம் இல்லாத படிப்புக்கு கடன் கிடையாது
அவர் பேசியதாவது: மனித வாழ்வில் வழிகாட்டுதல் என்பது முக்கிய அம்சம். கல்வி பயிலும் மாணவர்களுக்கு, ரிசர்வ் வங்கி, கடன் வழங்குவது குறித்து வழிகாட்டியுள்ளது. பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல், கல்லூரியில் சேர்க்கைக்கான அனுமதிச் சீட்டுடன், வீட்டுக்கு அருகில் உள்ள வங்கியை அணுக வேண்டும். அனைத்து பொதுத்துறை வங்கிகளிலும் கல்விக்கடன் பெறலாம். எல்லா படிப்புகளுக்கும் கடன் கிடைக்கிறது. ஆனால் தேர்ந்தெடுத்த படிப்பு, அந்த கல்லூரி அங்கீகாரம் பெற்றவையா என முதலில் பார்க்க வேண்டும். கல்லூரிக்கு அங்கீகாரம் இல்லையென்றாலும், பாடத்திற்கு அங்கீகாரம் இல்லையென்றாலும் கடன் கிடைக்காது.
உள்நாட்டில் படிக்கும் படிப்புக்கு நான்கு லட்ச ரூபாய் கடன் வரை, எவ்வித பிணையமும் தேவையில்லை. மொத்த செலவையும் கடனாக பெறலாம். அதற்கு மேல் தேவையெனில் ஐந்து சதவீதத் தொகையை பெற்றோர் செலுத்த வேண்டும். வெளிநாட்டு கல்விக்கு 15 சதவீத கட்டணத்தை பெற்றோர் செலுத்த வேண்டும். முதலாண்டில் அவசரமாக கட்டணம் செலுத்திய பின், கடனுக்கு விண்ணப்பித்தால், அந்தத்தொகை வங்கியிலிருந்து கடனாக பெற்றோருக்கு வழங்கப்படும். படித்து முடித்த ஓராண்டு அல்லது வேலை கிடைத்த ஆறு மாதத்தில் இருந்து கடனை திருப்பிச் செலுத்த வேண்டும். கடன் வாங்கி படிப்பதால் நன்கு படித்து, நல்ல வேலை கிடைக்க முயற்சி செய்ய வேண்டும் என்றார்.