இது ஒரு மிக சுவாரசியமான கேள்வி. எப்போதுமே வேலைகளுக்கான நேர்முகத் தேர்வுகளில் இந்த கேள்வி கேட்கப்படுவதை நாம் கவனிக்கலாம். பொதுவாக இக் கேள்விக்கு நமது இளைஞர்களின் பதிலாக குறிப்பிடப்படுபவர் யார் தெரியுமா?
*எனது தந்தை தான் எனது ரோல் மாடல்
*எனது தாய் தான் எனது ரோல் மாடல்
*எனது ஆசிரியர் தான் எனது ரோல் மாடல்
இந்த 3 பதில்களையும் விட கடந்த 3 முதல் 5 ஆண்டுகளில் நமது இளைஞர்களின் ரோல் மாடல் என நேர்முகத் தேர்வுகளில் குறிப்பிடப்படுபவர் யார் என்பதை அறிந்தால் மகிழ்ச்சியடைவீர்கள். நமது முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் தான் இன்று நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் உள்ள இளைஞர்களின் ரோல் மாடலாக குறிப்பிடப்படுகிறார்.
சமூகத்தின் கீழ் மட்டத்திலிருந்து போட்டித் தேர்வுகள் எழுதி வேலைக்கு வருபவர்களில் பெரும்பாலானோர் தங்களது பெற்றோர் இருவரையும் அல்லது ஒருவரை குறிப்பிடுகிறார்கள். இதைத் தாண்டி, பல இளைஞர்கள் அப்துல் கலாம் பெயரை குறிப்பிடுவது அவர்களுக்கு சவுகரியமாக இருக்கிறது. இளைஞர்களை நாட்டைப் பற்றி சிந்திக்க வைப்பது, அவர்களை ஊக்கப்படுத்தி சிறப்பாக அவர்களது எதிர்காலத்தை வடிவமைப்பது பற்றி யோசிக்க வைப்பது, மிக எளிமையான வாழ்க்கை முறையை நமது முன் வைத்து நம்மை கவருவது மற்றும் அவரைப் பற்றி செய்தித்தாள்களிலும் ஊடகங்களிலும் படித்த எந்த ஒரு அம்சமும் நமது இளைஞர்களை கவர்ந்து அதனால் அவர் ரோல் மாடலாக விளங்குவதில் ஆச்சரியமில்லை.
பெற்றோரை ஒரு ரோல் மாடலாக குறிப்பிடும் போது அவரது எந்த அம்சம் நம்மை கவர்ந்துள்ளது என்பதை தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.
மிக சாதாரணமான குடும்பத்தில் பிறந்திருந்தாலும் என் தந்தையின் நேர்மையும் கடுமையான உழைப்பும் தான் என்னை மிகவும் ஈர்த்துள்ளது என்பதாக இந்த பதில்கள் தரப்படுகின்றன. சொற்பமாக சம்பாதிக்கும் எனது தந்தையின் வருமானத்திற்குள் எங்களை படிக்க வைத்து நல்லொழுக்கத்தைக் கற்பித்துள்ள எனது தாய் தான் எனது ரோல் மாடல் என்பது போன்ற
பதில்களும் நேர்முகக் குழுவினரை கவருவதை காண்கிறோம்.
இப்படி பெற்றோரைப் பற்றி சொல்ல முடியாதவர்கள் எந்த தயக்கமுமின்றி நமது முன்னாள் ஜனாதிபதியைப் பற்றிக் கூறலாம் என்று தான் நேர்முகத் தேர்வுக்கு செல்பவர்களை நாங்கள் அறிவுறுத்துகிறோம். உங்களது வெற்றிக்கு எங்களது வாழ்த்துக்கள்.