சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவும், யு.கே.வின் வார்விக் பல்கலைக்கழகமும் மாணவர்களுக்கான கல்விக் கடன் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன.
பிரிட்டனில் உள்ள வார்விக் பல்கலைக்கழகம், இந்தியாவில் இருந்து தனது பல்கலைக்கழகத்தில் கல்வி பயில வரும் மாணவர்களுக்கு ரூ.20 கோடி மதிப்பிலானக் கல்விக் கடன் வழங்க சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் தலைவர் எஸ். ஸ்ரீதர் வார்விக் பல்கலைக்குச் சென்று பார்வையிட்ட பிறகு இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். இதன்படி, வார்விக் பல்கலையில் பயில விரும்பும் இந்திய மாணவர்களுக்கு உடனடியாக கல்விக் கடன் வழங்க ஒப்புதல் வழங்கப்படும்.
வார்விக் தலைவரும், பேராசிரியருமான லார்ட் குமார் பட்டாச்சார்யாவும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். வார்விக் பல்கலையில் பயில விரும்பும் மாணவர்களுக்கு கல்விக் கடனை துரிதமாக வழங்குவது மட்டுமல்லாமல், பல்வேறு நடவடிக்கைகளை ஒருங்கிணைந்து செய்யவும் இந்த ஒப்பந்தம் வழி வகுக்கிறது.
வார்விக் பல்கலையில், இந்திய மாணவர்களை அதிகளவில் வரவேற்கும் வகையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதனால், இந்த வங்கியில் வார்விக் பல்கலையில் உயர்கல்வி பயில விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு துரித கதியில் கல்விக் கடன் வழங்கப்படும்.