வரும் கல்வி ஆண்டில் ஒன்றரை லட்சம் மாணவர்களுக்கு ரூ.900 கோடி கல்வி கடன் வழங்கப்படும் என்று இந்தியன் வங்கி தலைவர் டி.எம்.பாசின் கூறினார்.
இந்தியன் வங்கியின் 104-ம் ஆண்டையொட்டி 104 ஆட்டோக்கள் வழங்கும் விழா சென்னை ராஜாஅண்ணாமலைபுரம் செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியில் நேற்று மாலை நடைபெற்றது.
விழா முடிந்ததும் இந்தியன் வங்கி தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டி.எம்.பாசின் கூறியதாவது, சுயவேலை வாய்ப்பை அதிகரிக்கவும், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் குறைந்த வட்டியில் ஆட்டோ வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
மாணவர்களுக்கு கல்வி கடன் வழங்கும் திட்டம் தொடர்ந்து வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2011-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை ஒரு லட்சத்து 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு ரூ.3 கோடி வரை கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது. வரும் கல்வி ஆண்டில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் மாணவர்களுக்கு ரூ.900 கோடி கடன் வழங்கப்படும். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் இந்தியன் வங்கி கடன் தொகையை வசூலிப்பதில் முதல் இடத்தில் உள்ளது. இவ்வாறு இந்தியன் வங்கி தலைவர் டி.எம்.பாசின் கூறினார்.