முதலாமாண்டு படிப்பின்போதே எதிர்காலத்தைப் பற்றி யோசிக்கும் மாணவர்கள் அதிகரித்துக் கொண்டே வருவதை உங்களது கடிதம் காட்டுகிறது. எம்.எஸ்சி., மைக்ரோபயாலஜி படிப்பை தமிழ்நாட்டில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் உட்பட சில பல்கலைக்கழகங்களிலும் குறிப்பிட்ட சில கல்லூரிகளிலும் நீங்கள் படிக்கலாம்.
நீங்கள் 3 ஆண்டு பட்டப்படிப்பை படித்து முடிக்கும் போது இந்த கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம். எனவே கல்லூரியைப் பற்றி இப்போது கவலைப்படாமல் படியுங்கள். பொதுவாக மாணவர்கள் செமஸ்டர்களில் அதிக மதிப்பெண் பெறுவதை மட்டுமே மனதில் கொண்டு படிப்பதால், தேர்வு எழுதி முடித்தவுடனேயே படித்தவற்றை மறந்து விடுகிறார்கள்.
எனவே இப்போதிருந்தே படிப்பை நன்றாக மனதில் பதியும் வகையில் படியுங்கள். எம்.எஸ்சி., படித்தால் தான் மைக்ரோபயாலஜி, பயோடெக்னாலஜி, பயோகெமிஸ்ட்ரி போன்ற பிரிவுகளில் நல்ல வேலை பெற முடியும். வெறும் பட்டப்படிப்புக்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. இது போல பட்டப்படிப்புகளை முடித்து விட்டு பலர் போட்டித் தேர்வு எழுதி வங்கிகள், பொதுத் துறை நிறுவனங்களில் வேலை பெற முயற்சிப்பதையே நாம் காண்கிறோம். எனவே தெளிவாக இலக்கை நிர்ணயித்து அதற்கேற்ப உங்களது முயற்சியைத் துவங்கவும்.