பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே போதையில் இருந்தகல்லுாரி மாணவர்கள் தாக்கியதில், ஊராட்சி துணைத்தலைவரின் கணவர் உள்ளிட்ட நான்கு பேர் காயமடைந்தனர். ஆத்திரமடைந்த மக்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே புளியம்பட்டியைச்சேர்ந்த ஊராட்சி துணைத்தலைவர் தேவிகாராணியின் கணவர் துரைசாமி, 62. நேற்று மாலை இவர் இப்பகுதியில் உள்ள நுாலகம் அருகே செல்லும் போது, மூன்று கல்லுாரி மாணவர்கள், போதையில் தகராறில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
துரைசாமி, அவர்களிடம் தகராறில் ஈடுபட வேண்டாம் என கூறியுள்ளார். ஆனால் மாணவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவரை தாக்கினர்.
தடுக்க வந்த அதே பகுதியைச்சேர்ந்த பிரபு, 39, கனகராஜ், 52, ஆறுமுகம், 59 ஆகியோரையும் தாக்கி தப்பிச்சென்றனர். காயமடைந்த நான்கு பேரும், பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள், பொள்ளாச்சி - பல்லடம் ரோட்டில்மறியலில் ஈடுபட்டனர்.
பொதுமக்கள் கூறியதாவது:
புளியம்பட்டி ஊராட்சியில், நுாலகம் அருகே தினமும், மூன்று பேர் கஞ்சா, மது போதையில் சுற்றி தகராறு செய்வது வழக்கமாக உள்ளது. நேற்று இதுபோன்று போதையில் நின்ற மாணவர்களிடம், ஊராட்சி துணைத்தலைவரின் கணவர், இப்படி அட்டகாசம் செய்வது நியாயமா என கேட்டுள்ளார்.
அதற்கு மாணவர்கள், வாக்குவாதம் செய்து அவரை தாக்கினர். இதை தடுக்க சென்றவர்களையும் தாக்கினர். கஞ்சா விற்பனை மற்றும் இதுபோன்று தகராறில் ஈடுபடுபவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.
சமரசம் செய்த போலீசார், சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என உறுதியளித்தனர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட மாணவர்களை பிடித்து, மகாலிங்கபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.