அவிநாசி: அவிநாசி அருகே நரிக்குறவர் இன பழங்குடியினர் குழந்தைகளுக்கு நோட்டு புத்தகம், பேனா அவிநாசி அனைத்து மகளிர் போலீசார் சார்பில் வழங்கப்பட்டது.
அவிநாசி ஒன்றியம், பழங்கரை ஊராட்சிக்குட்பட்ட நரிக்குறவர் இன பழங்குடியினர் வசிக்கும் பகுதியில் பள்ளி செல்லா குழந்தைகளுக்கு நோட்டுப் புத்தகம், பேனாக்கள் வழங்குவது மற்றும் பெண் குழந்தைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியும், அவிநாசி அனைத்து மகளிர் போலீசார் சார்பில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு டி.எஸ்.பி., சிவக்குமார் தலைமை வகித்தார். அனைத்து மகளிர் போலீசார் இன்ஸ்பெக்டர் ரோஸ்லின், ஏட்டுகள் முத்தரசி, சித்ராதேவி, ஜோஸ்பின் ஜூலியா மேரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண் குழந்தைகளுக்கு கல்வியை கொடுப்போம் என்ற தலைப்பில் அவிநாசி அனைத்து மகளிர் போலீசார் சார்பில் பள்ளி, கல்லுாரிகளில் விழிப்புணர்வு நடைபெற உள்ளதாக, போலீசார் தெரிவித்தனர்.